Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Friday, March 25, 2022

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5


அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்றும் சாதி ஒழிய குறிப்பிட்ட வகுப்பாளர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். அவரின் எழுத்துப்படி அவர் சிறிது வருடங்களுக்கே பரிந்துரைத்தார். ஆனால் அவ்வப்பொழுது உள்ள அரசுகளும் அரசியல்வாதிகளும் சமதர்மம் சமத்துவம் காண்பதை விட்டுவிட்டு நேரத்திற்கு ஏற்ப சாதி மதங்களுக்கு சலுகைகள் வழங்கி மக்களை இன்னும் எமாற்றி வருகின்றனர். அம்பேத்கர் சொன்ன குறிப்பிட்ட காலமும் கழிந்து நாம் இன்னும் அவற்றை தூக்கி பிடித்துக் கொண்டு உள்ளோம். அவர்களை நாம் முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லாமல் அவர்களை இன்னும் இட ஒதுக்கீடுக்கு போராடும் சமுதாயமாகவும், குறைந்த மதிப்பெண்கள் வாங்கும் சமுதாயமாகவும், அவர்களுக்கென்று தனி பள்ளிகளும் கல்லூரிகளும் தொடங்கி அவார்களுக்கு சரியாக பாடம் நடத்தி சொல்லித்தராமல், அவர்களை மற்றவர்களுடன் சரி சமமாக நடத்தாமல், சரி சம வாய்ப்புகள் வழங்காமல், இன்னும் அவர்களை அமர்த்தியே வைத்துள்ளோம். 


பெரியார் அரசியல் போராட்டங்கள் மூலம் சாதிக்க முடியாது என்று நம்பினார். ஆனாலும் பெரியார் அரசியல்வாதியாக பல காலம் இருந்தவர்தான். ஆனால் அம்பேத்கரோ அரசியல் போராட்டங்கள் மூலம் தான் விடுதலை பெற முடியும் என்று நம்பியவர். இன்று நடக்கும் விசயங்களை கவனித்தாலே தெரியும், அரசியல் போராட்டங்கள் மூலம் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மேலும் ஆன்மிகம், தனி மனித ஒழுக்கம் இரண்டிற்கும் பெரியார் அதிக மதிப்பு அளிக்காமல் போனது ஒரு வருத்தத்திற்குரியது. இங்கு நாம் குறிப்பிட்ட பெரும்பான்மையானவர்கள் ஆன்மீகத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். தன்னை ஒரு உதாரணபுருஷனாக்கி வாழ்ந்து காண்பித்தார்கள்.  


திராவிடத்தின் தந்தை பெரியார் என்றால் தமிழ் தேசத்தின் தந்தை அயோத்திதாசர் என்று கூறலாம். அம்பேத்கர் தீண்டாமை உருவான காலமாக கி பி 4ம் நூற்றாண்டை குறிபிடுகிறார். ஆனால் அயோத்திதாசரோ கல்வெட்டு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கொண்டு தீண்டாமை பிற்கால சோழர் காலத்தில் தான் தோன்றியிருக்கக் கூடும் என்று கூறுகிறார். அதன் பின்னர், மொகலாய படையெடுப்பு, பின்னர் விஜய நகர பேரரசு, பாளையக்காரர்கள், காலனிய அரசுகள் போன்றவர்களின் ஆட்சியில் தான் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்தது. அம்பேத்கர் சொல்வது வாடா இந்தியாவில் சரியாக இருக்கும். இந்திய வரலாறு எழுதப்படும் போதே அது ஒரு வாடா இந்திய சிந்தனையுடன் தான் எழுதப்பட்டது. அதுவும் ஆங்கிலேய அதிகாரிகள் இந்தியாவை ஆளுவதற்காக எழுதப்பட்ட ஒரு வரலாறு. அதில் வேதங்களும், வேதக் கருத்துக்களும் தூக்கிப் பிடிக்கப்பட்டன. அசோகர் பல போராட்டங்களுக்கு பிறகே மன்னரானார். ஆனால் நாம் அதை வேறு மாதிரி எழுதி, இந்திய விடுதலைக்கு பிறகு, அவரை மகான் ஆக்கி விட்டோம். 


பெரியாருக்கு முன்பே பார்ப்பன எதிர்ப்பு, சுய மரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், தீண்டாமை ஒழிப்பு பற்றி பேசியவர்.  அம்பேத்கருக்கு முன்னரே, சாதிய கொடுமைகளிருந்து விடுதலை பெற புத்தமே தீர்வு என்று புத்தரை நோக்கி நகர்ந்த தீர்க்கதரிசி. 1881 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தாழ்த்தப்ட்டோர் இந்துக்கள் அல்ல, மற்றாக பூர்வத் தமிழர் என்று பதிய கோரிக்கை வைத்தார். ஆதி தமிழர் மற்றும் ஆதி திராவிடர் அடையாளங்களை முன்வைத்தார். "திராவிட" என்ற அரசியல் சமூக பெயரை முதன் முதலில் உபயோகித்த பெருமை இவரையே சாரும். தீண்டத்தகாத இந்துக்கள் என்று இல்லை. அவர்கள் சாதியற்ற திராவிடர்கள் என்ற வாதத்தை முன் வைத்தார். 1892 ல் சென்னையில் நடந்த மகாஜனசபை மாநாட்டில் கலந்து கொண்டு, ஓடுப்பட்டோருக்கான உரிமைக்கும் ஆலய நுழைவுக்கும் குறள் கொடுத்தார். இந்த மாநாட்டிற்கு பின்னர் இலங்கை சென்று புத்த தீக்ஷை பெற்று பௌத்தத்திற்கு மாறினார். இவர் சாக்கிய பௌத்த சங்கத்தை தோற்றுவித்து புத்த மதம் பரப்பினார்.  சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் இவருடன் இணைந்து சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடினார். . இவர் திராவிட மகாஜனசபை தொடங்கி நடத்திய போது, இவரின் மைத்துனர் ஆதி திராவிட மகாஜன சபை தொடங்கி ஆதிக்க சாதிக்களுக்கு எதிராக பலமாக போராடினார். 


திராவிட இயக்கங்கள் வந்த பிறகு அதிகாரம் ஒரு சாராரிடமிருந்து மற்றொரு சாரருக்கு மாறி உள்ளது என்பது உண்மை. ஆனால், சாதி மறைந்தது என்ற சொல்ல முடியாது. சாதி ஒழிய வேண்டும் என்பதை விட பிராமணர்கள், பார்ப்பான் அல்லது பிராமணீயம் ஒழிய வேண்டும் என்ற ஒற்றை சிந்தனைதான் வளர்ந்து வருகிறது என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததை விட இன்று மிக அதிகமான சாதிச் சங்கங்கள் வந்து விட்டன. சாதிக்கொரு கட்சியும் வந்து விட்டது. தேர்தல் நேரத்தில் இவர்களின் கூப்பாடுகள் தான் அதிகமாக உள்ளன.


ஆன்மீகத்தை பற்றி மார்க்ஸ் (Karl Marx) அவர்கள் கூறும் போது "அது மக்களுக்கான ஒரு போதை (opium of the people)" என்றார். பகுத்தறிவு என்பது, இந்திய தத்துவ மறபுகளில் பண்டைய காலம் தொட்டே உள்ளது. இப்பொழுது வந்த ஒரு தரிசன மரபு அல்ல. சாருவாகம், உலகாயுதம், சமணம், மீமாம்சம் என்று முன்பே உள்ளது. அப்பொழுது அரசியல் செய்பவர்கள் இந்திய தத்துவ மரபை கொச்சைப்படுத்துபவர்களாகவும் புரதான சிந்தனைகளை கேலி பண்ணி சிரிப்பவர்களாகவும், அதைபற்றி பேசுபவர்களை பழமைவாதிகள் என்று கருதுகின்ற போக்கு வளர்ந்து வருகிறது.  மேலும் இந்திய சிந்தனை பரப்பு ஒரு காலாவதியான மரபு என்று திராவிட சிந்தனையாளர்களால் கருதப்படுகிறது. கிரேக்கத்தில் மட்டும் அல்ல, இந்தியாவிலும் பகுத்தறிவு கேள்வி கேட்கும் மரபு பண்டைய காலங்களிலே இருந்து வந்துள்ளது. 


தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்று பொருள். தத்துவ ஞானம் என்பது மெய்பொருள் அறிவது. ஒட்டுமொத்தமாக முழுமையான புரிதலுடம் பார்க்கும் மரபை தரிசனம் என்று சொல்லலாம்.   இதை தர்க்கபூர்வமாக கூற முற்பட்டால் தத்துவ தரிசனம் என்று திரு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் கூறுவார்கள். மேற்கத்திய தத்துவ ஞானம் முழுக்க முழுக்க தர்க்கத்தை ஆதாரமாக கொண்டிருந்தது. ஆனால், கிழக்கத்திய தத்துவ ஞானம் வாழ்வியலை மையமாகக் கொண்டு சுற்றுகிறது. பிரான்ஸ் நாட்டு நாத்தீகர் ஜீன் பெரி லேமன் - Jean-Pierre Lehmann  - 'இந்து மதம் 'பற்றி தெரிவித்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத் தக்கதாகும். “உலகிற்கு ஒரு ஒழுக்க முறை, ஆன்மீகம்,நேர்மை வழிகாட்டி தேவைப்படுகிறது.இந்தியாவில் உள்ள மதம் மற்றும் தத்தவப் பாரம்பரியங்கள் அந்த மூன்றையும் நன்கு 

வழங்கக் கூடியவையாகும்.”( The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.) 


என்னைப் பொறுத்தவரை நாம் பகுத்தறிவு பேசிக்கொண்டு கலாச்சார அழிவு தான் செய்து கொண்டிருக்கிறோம். வெள்ளைகாரனும் மற்றவனும் நம்மை ஆள கொண்டு வந்த திராவிடம் என்ற ஒரு மாயையைப் பற்றி பேசி மேலும் அளும் வர்க்கம் ஆள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வாழ்ந்து காட்டி பின் வருபவர்களுக்கு வழிகாட்டுவதே கலாச்சாரம். சமூகத்தை நல் வழிபடுத்தும் முறை. நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என் ஆசிரியர் என்னிடம் கூறியது. நீ நன்றாக இருந்தால் உன் வீடு நன்றாக இருக்கும். உன் வீடு நன்றாக இருந்தால் உன் தெரு நன்றாக இருக்கும். உன் தெரு நன்றாக இருந்தால் உன் ஊர் நன்றாக இருக்கும். உன் ஊர் நன்றாக இருந்தால் உன் நாடு நன்றாக இருக்கும், உன் நாடு நன்றாக இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். இந்த உலகம் நன்றாக இருந்தால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பர். எனவே மாற்றம் தொடங்கவேண்டியது, ஒவ்வொருவரிடமும் இருந்தே தவிர, மொத்தமாக அரசியல் கட்சிகள் சொல்வது போல சமூக மற்றம் வர வாய்ப்பில்லை. 


இங்கு பெரியாரும், பெரியோர்களும் தோற்கவில்லை... திராவிடமும் தோற்கவில்லை. சமூக நீதி, சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை, எதுவும் தோற்கவில்லை. மற்ற மாநிலங்களை விட தென்னிந்திய மாநிலங்களில் விழிப்புணர்வு அதிகமாகவே உள்ளது. ஆனால் இப்பொழுது இந்த கருத்துக்களை தேவையானவர்கள் அவர்களின் தேவைக்கு ஏற்றார் போல் எடுத்துக் கையாளுகின்றனர். அதனால், சமூகத்தில் ஒரு தவறான சிந்தனைப் போக்கு உருவாகி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது 


முற்றும்.

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 4

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 4


மனிதன் வேட்டைச் சமுதயாத்திலிருந்து, மேய்ச்சல் சமுதாயமாக மாறி, பின் விவசாயத்திற்கு மாறியது, அதன் பின் வணிகத்தின் எழுச்சியும், நகரத்தின் வளர்ச்சியும் சமூகத்தை நிறைய மாற்றின. முதலில் மனிதனுக்கு தேவை உணவு, உறைவிடம், உடை. தற்கால மனிதனுக்கு இந்த வரிசையில் ஒரு சிறு மாற்றம். உடை நடுவிலோ அல்லது முதலிலோ செல்லும். உணவுக்காக சிறு சிறு குடிகள் இடம் மாறி மாறி சென்றனர். நிரந்தர உணவு கிடைக்கத் தொடங்கிய போது, அவர்களைப் போலவே உணவு தேடி வரும் மற்ற குடிகளை தடுக்கத் தொடங்கினார். இதனடிப்படையிலும், குடிகளுக்குள்ளேயே மணம் முடித்துக் கொண்டனர். ஒவ்வொறு கூட்டம் அல்லது குடிக்கு ஒரு தலைமை, குடிச் சின்னம் வந்தது. செய்யும் தொழிலுக்கு ஏற்ப, உண்ணும் உணவுச் சூழலுக்கு ஏற்ப, வாழக்கை முறைக்கு ஏற்ப குழுக்களும் குடிகளும் உண்டாயின  


ஆனால் காலப்போக்கில், நிலவுடமைச் சமுதாயம் வரும்போது தான் சாதிய அமைப்புகள் உருவாகின்றன. அதன் பின்பு தான் கீழ் மேல், உயர்வு தாழ்வு என்ற அடிப்படை உருவாகிறது. அதன் பின்பு 10 நூற்றாண்டு அளவில் வலங்கை இடங்கை என்று இரு பிரிவு உண்டாகிறது. 


பொதுவாக பண்டைத் தமிழகத்தில், குடி அடுக்கு முறை இவ்வாறு வரும். குடித்தலைமைக்கு அடுத்து வருபவர், உழவுக் குடிகள், அதன் பின்பு ஆயர் அல்லது இடையர் போன்ற மேய்ப்பர்கள், அடுத்தது வணிகர், குயவர், கொல்லர், தச்சர், அதற்கு அடுத்தது குலத்தைக் காக்கும் மறவர்கள், படை வீரர்கள். அதற்கு பின்னர் வலையர், புலையர் போன்ற குடிமக்கள். இது ஒரு அமைப்பு முறை மட்டுமே. இதில் அடிமைத்தனம் இல்லை. 


கி மு 300 ல் கிரேக்கத்தில் இருந்து இந்தியா வந்த மெகஸ்தனிஸ் என்னும் பயணி இந்தியாவில் ஏழு வகையான மக்கள் அடுக்கு இருந்ததாக தனது பயணக் குறிப்பு நூலான இண்டிகா (INDIKA) எனும் நூலில் தெரிவித்து உள்ளார். 


1. தத்துவஞானி அல்லது அறிவார் - இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு - இவர்களுடைய வேலை கல்வி மற்றும் கேள்வி

2. உழவர் - எண்ணிக்கையில் சற்று அதிகம் - தொழில் உழவு. போருக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை - எதிரிகள் இவர்களைத் தாக்க மாட்டார்கள். அனைத்து நிலங்களும் அரசனுக்கு சொந்தம். விவசாயம் செய்து விளைந்ததில் நாலில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக கட்ட வேண்டும். 

3. ஆடு மற்றும் மாடு மேய்ப்பவர்கள் - இவர்கள் ஓரிடத்தில் தங்காது எல்லாம் இடமும் சென்று மேய்ப்பர். செல்லும் இடங்களில் வேட்டையாடி மிருகங்களையும் பறவைகளையும்  பிடிப்பதன் மூலம் அவர்கள் விவசாயிகளைக் காக்கின்றனர். அதற்கு பலனாக அரசன் அவர்களுக்கு உணவு அளிக்கின்றான்

4. ஆசாரியர்கள் மற்றும் வணிகர்கள் - இவர்களில் சிலர் ஆயுதம் செய்பவர்கள், கப்பல் கட்டுபவர்கள், பானை மற்றும் பண்டங்கள் செய்பவர், கலைப்பொருட்கள் செய்பவர்கள், பல்வேறு பொருட்களை உருவாக்குபவர்கள், இவற்றை  மற்றும் வேளாண் பொருட்களை வணிகம் செய்பவர்கள் அடங்குவர்.

5. போர்வீரர்கள் - எப்பொழுதும் நாட்டை காக்கவும் நாட்டு மக்களைக் காக்கவும் போர் முனைக்கு செல்லவும் தயாராக இருப்பவர்கள்.

6. ஒற்றர்கள் - நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் எல்லா விசயங்களையும், ரகசியமாக, கவனமாக ஒற்றறிந்து அரசனுக்கு தெரிவிப்பது. 

7. அரசு அதிகாரிகள் - பொதுக் கடமைகள் மற்றும் அரசை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள்


நமது சமுதாயம் முன்னேற்றத்தில் பின்னடைவைச் சந்திக்கும் ஒவ்வொரு தடைவையும், மகான்களும், முனிவர்களும், சித்தர்களும், புலவர்களும், கவிஞர்களும் அவதரித்து நம்மை வழி நடத்துகின்றனர். அதில் கபீர் தாசரும் ஒருவர். 


கபீரின் சில வாசகங்கள்.


"உன்னை உள்ளேயே தேடிப்பார், இராமபிரானையும் கிருஷ்ணரையும் நீ தரிசிக்கலாம். வெளியே சடங்குகளில் காலத்தை வீணாக்காதே. உன்னை மாற்றிக் கொள். கடவுளைக் காணலாம்"


"ஆணவத்தில் சிக்கிக் கொண்டபொழுது இறைவனை காண இயலவில்லை. அதே சமயம் இறைவன் வந்த போது நான் கரைந்து போனேன் அறியாமை என்ற இருள் அகன்று விட்டது. வெளிச்சத்தைக் கண்டேன்"


கபீர் குரு ராமானந்தரின் சீடர். அவர் சாதிய தடைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் உடைத்தெறிந்து மனிதகுலம் ஒன்றே என்று பறைசாற்றினார். கபீரின் முக்கியமான போதனைகள் உலக சகோதரத்துவம், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு என்பதே.  


கபீரின் ஒரு வழித்தோன்றலாக நாம் அம்பேத்காரை காணலாம். ஆனால் அம்பேத்கர் பெரியாரை போல் சாதி மத எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் கொள்ளாமல்  அதற்கு தீர்வுகளையும் சொன்னார். அம்பேத்கர் ஒரு விதத்தில் காந்தியின் தலித் கொள்கையையும் காந்தியத்தையும் எதிர்த்தார். அதேபோல் மார்க்சியத்தையும் எதிர்த்தார். அவரின் ஒரு கூற்று. நாங்கள் ரஷிய புரட்சியை வரவேற்கிறோம். ஏனென்றால் அது சமத்துவத்தை அடிபடையாகக் கொண்டது. ஆனால், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இருக்க முடியாது என்றார். இவை மூன்றையுமே தரவல்லது கம்யுனிசம் அல்ல. புத்தம் மட்டுமே. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை முதலில் பிரகடனம் செய்தவர் டாக்டர் அம்பேத்கர். ஆனால் அது முதல் வட்ட மேசை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் பின்னர் அவர் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தொகுதி கேட்டார். 


டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் நிலவும் சுரண்டல் மட்டும் வறுமைக்கு தீர்வு சோசலிசம் மட்டுமே என்று உறுதியாக நம்பினார். ஆனால் அவர் மார்க்சியம் சொல்லும் பொருள் முதல் வாத கொள்கையை ஏற்க தயாராக இல்லை. பொருள் முதல் வாதம் மட்டுமே அடித்தளம் அல்ல. அதற்கு பொருள் மட்டும் அல்லாது சமூக, மத, அரசியல் ஜனநாயக அடித்தளமும் தேவை என்று கூறினார். 


மேலும் அம்பேத்கர், இந்து மதமும் ஒற்றுமையும் ஒன்றோடொன்று சேரவே முடியாது. அடிப்படையில் இந்து மதம் பிரிவை (சாதியை) கொள்கையாகக் கொண்டது. இந்துக்கள் ஒற்றுமையாக வாழ விரும்பினால் இந்துமதத்தைத் தூக்கியெறிய வேண்டும். இந்துமதம் உங்களுக்கு உரியதில்லை. சாதி, தீண்டாமை ஒழிப்பு அதில் இல்லை. அதிலிருந்து வெளியேறுங்கள். புத்த மார்க்கம் வைதீகத்திற்கு எதிர்ப்பானது. புத்தர் தர்க்கரீதியில் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து சொன்னவர். புத்தம் மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவது. ஒழுக்கத்தைப் போதித்தவர். அது மனிதர் பின்பற்றிவந்த மார்க்கம். சம அந்தஸ்து கொடுத்து சமமாய் நடத்தும் மார்க்கத்தில் சேருங்கள்.


அம்பேத்கர், பெரியார் மற்றும் காந்தி வாழ்ந்த நாட்களில், இதே கொள்கைக்காக போராடியவர், ஸ்ரீ நாராயணகுரு. தமிழகச் சூழலைக் காட்டிலும் சாதி மற்றும் தீண்டாமை பாகுபாடு கேரளத்தில் மிக அதிகம். தெருவிற்குள் செல்ல கூடாது. ஒரு சில சாதியினர் பத்தடி தள்ளி நின்று தான் பேச வேண்டும், சிலரோ அதற்கு மேலும். கடுமையான சாதிக் கட்டுபாடுகள். மற்றும் கீழ் சாதிப் பெண்கள் மார் மூட தடை. முலை வரி. என்று பல. சுவாமி விவேகநாதர் கூட கேரளத்தை ஒரு பைத்தியக்கார விடுதி என்றே அழைத்தார். 


கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதியில்லாத காரணத்தினால் அவர், அவர் வாழ்ந்த ஊராகிய அருவிபுரம் கிராமத்தில் ஒரு சிறிய கோயில் கட்டி அதில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, அனைவருக்கும் அனுமதி அளித்தார். எப்படி ஒரு தாழ்த்தப்பட்டவர் சிவலிங்க பிரதிஷ்டை செய்யலாம் என்ற கேள்வி எழுந்த போது, இது நீங்கள் வணங்கும் சிவலிங்கம் பிரதிஷ்டை இல்லை என்று கூறினார். அங்கே ஒரு அறிவிப்பும் எழுதி வைத்தார். "சாதிபேதம் மதத்துவேஷம் ஏதுமின்றி அனைவரும் சோதரராய்வாழ்கின்ற வழிகாட்டி இடமே இது". கேரளா பூமியில் சுவாமி நாராயண குரு ஒரு வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்தார். இந்திய அளவில் அது ஒரு சிறந்த நிலைப்பாடு. எல்லாவற்றிக்கும் எதிர் நிலைப்பாடு எடுக்காமல் அனைத்து கருத்துக்களையும் உள்வாங்குவது, அனைவரையும் நேசிப்பது, உயர்சாதியினரின் பண்பாடு கலாச்சாரம், கல்வி போன்றவற்றை ஒடுக்கப்ட்டவர் சுவீகரிப்பது, எதிர்ப்புக் கொள்கைகளை தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்திப்பது என்று பயணித்தார். அவருடைய கொள்கையில் அவர் வெற்றியும் பெற்றார். கேரளத்தின் நிலை, தற்போதைய தமிழகத்தை விட நின்றாக உள்ளது. எழுத்தாளர் திரு . ஜெயமோகன், நாராயண குருவைப் பற்றிய  தன்னுடைய கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறு கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அவருடைய வரிகளிலே "குலதெய்வங்களை இல்லாமல் செய்ததில் நாராயணகுருவிற்கு இன்னொரு நோக்கமும் இருந்திருக்கலாம். குலதெய்வங்கள் என்பவை ஒருவகையில் குலச்சின்னங்கள். அவை பழைமையை பிரதிநிதித்துவம் செய்பவை. ஈழவர்களின் பிற்பட்ட வாழ்க்கை முறையும் உலகநோக்கும் அவற்றிலும் ஊடுருவி இருந்தன.................  சிறுதெய்வங்களை அகற்றி பெருந்தெய்வங்களை பதிட்டை செய்தது வழியாக நாராயணகுரு அடிப்படைக் குறியீடுகளை மாற்றியமைக்கிறார்" 


இதே நூற்றாண்டில் பிறந்த அய்யா வைகுண்டரும் பெரியாருக்கு முன்பே சாதி ஒழிப்புக்கு மிகச் சிறந்த தொண்டாற்றியுள்ளார்.  வைகுண்டர் பிறந்த போதே தீண்டாமை அவரின் வாழ்வில் தொடங்கி விட்டது. அவர் பிறக்கும் பொது அவருக்கு இட்ட பெயர் முடிசூடும் பெருமாள். இது உயர் சாதியினர் வைக்கும் பெயர் என்று அரசனிடம் புகார் கொடுத்து பெயர் மாற்ற ஆணை பெற்றனர். அதன்பலனாக முத்துக்குட்டி என்ற பெயர் வைக்கப்பட்டது. 1833 ல் பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்பொழுது அந்த நாட்டை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவின் ஆட்சியில் பயங்கரமான சாதிக் கட்டுபாடுகள் இருந்தன. இந்த சமயத்தில் தான் சுவாமி அவர்கள் சமத்துவ சங்கம் என்ற ஒன்றை தோற்றுவித்தார். முட்டம் என்ற பகுதியில் சமுதாயக் காலனி அமைத்தார். உயர் சாதியினை எதிர்த்ததோடு அந்த பகுதி மன்னனையும் எதிர்த்தார். ஒரு புதிய சமய நெறியை உருவாக்கி சமத்துவ சமுதாயத்தை வளர்க்க பாடுபாட்டார். நூற்றாண்டுகளுக்கு முன்னரே கருவறைக்குள் சென்று வழிபடும் நிலையை ஏற்படுத்தினார். பிராமணர்கள் இல்லாமல் அவர்களது சடங்குகளை அவர்களே நடத்திக் கொள்ள அறிவுறுத்தினார்  


தொடரும்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 3

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 3


இதெற்கெல்லாம் மேலே ஒரு படி சென்று நமது பாரதியார், குழைந்தைகளுக்கு சொல்லும் கவிதையில்


"சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி, உயர்ந்த மதி, கல்வி  - அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர் " என்றார்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவன் சொன்னது போல பாரதியும்,


"காக்கை குருவி எங்கள் சாதி

காடும் மழையும் எங்கள் கூட்டம்" என்று எல்லா உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளையும் ஒரே சாதிக்குள் அடக்குகிறார்.


மேலும் பெண் விடுதலை பற்றியும் எழுதி உள்ளார்.


"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டு மறைவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை கான் என்று கும்மியடி"


தமிழகத்தில் தீண்டாமை மற்றும் சாதி ஒழிப்பு முற்காலம் தொட்டு இக்காலம் வரை நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இதைபோன்ற ஒரு தொடர் இயக்கம் வடநாட்டில் இல்லை. தென்னிந்தியாவில் எல்லா நூற்றாண்டுகளிலும் இதற்கான குரல்கள் ஒலித்துக் கொண்டேதான் இருந்தன. ஸ்ரீ ராமானுஜர் 10ம் நூற்றாண்டில் செய்த புரட்சி ஒரு மிகப் பெரிய புரட்சியாகும். அவரால் இந்த புரட்சியை சத்தமே இல்லாமல் மிக அமைதியாக செய்ய முடிந்ததற்கு காரணம், அவர் அரசியல் கலக்காமல் தனக்கென்று எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஆன்மீக வழியில் செய்ததே. அவர் காலத்தில் தாழ்த்தப்பட்டோர் "தெரு குலத்தோர்" என்று அழைக்கப்பட்டனர். இதனை "திருக்குலத்தோர்" என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். மேலும், தன் குருநாதர் தனக்கு உபதேசித்த மந்திரமான, "ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தை கோயில் கோபுரம் மேல் ஏறி நின்று ஊர் மக்கள் அனைவரும் கேட்க உபதேசித்தார். குரு தன்னிடம் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல், தனக்கு நரகமே கிடைத்தாலும், இதை கேட்கும் அனைவரும் சொர்க்கம் செல்வர் என்று மகிழ்ந்து கூறினார். 


இதையே தான் வள்ளலாரும் 19ம் நூற்றாண்டில் ஆன்மிக வழியில் செய்து சாதித்துக் காட்டினார். 1872 ல் சத்தியஞான சபையை அமைத்தார். அந்தக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைய தடை இருந்தது. அத்தகைய தடைகளைத் தகர்த்து எல்லோரையும் அவருடைய சத்தியஞான சபையில் வழிபட வைத்தா பெருமை அவரையே சாரும்.  மூட பழக்கதிற்கு எதிராக,

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக" என்று கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகளை கருணையுடன் கண்டித்தார். 


"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும்" என்று சமத்துவ சமதர்ம சூழ்நிலையுண்டாக ஒரு ஆன்மீக வாதியாக வழிவகுத்தார் என்பது ஒரு பெருமை


ஆண் பெண் சமத்துவத்தைப் பற்றி அன்றே பாடிச் சென்றுள்ளார் என்பது ஐநூறு சிறப்பு

"ஆணினுள் பெண்ணும், பெண்ணினுள் ஆணும் 

அண்ணுறவகுத்த அருட்பெரும் ஜோதி"


மேலும் அவர் "சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி" என்று தன்னுடைய அருட்பெரும்ஜோதி அகவலில், சாதி, மாதம், சமயம் எல்லாம் பொய்யென்று உரைக்கிறார். 


பொதுவாக தமிழர்களுக்கு நிறுவனமயமாக்கப்பட்ட சமயங்கள் மற்றும் சடங்குகள் ஒன்றும் இருக்கவில்லை. ஐவகை நிலங்களை அடிப்படையாக கொண்ட சிறுதெய்வ வழிபடும், இயற்கை வழிபாடுமே இருந்தன. பொதுவாக பழங்குடி இனங்கள் அனைத்திலுமே இயற்கை வழிபாடு தான் பிரதானமானது. தொல்காப்பியரின் கூற்றுப்படி


மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமோ


மாயோன் - திருமால் - முல்லை 

சேயோன் - முருகன் - குறிஞ்சி

வேந்தன் - இந்திரன் - மருதம்

வருணன் - வருணன் - நெய்தல்


குறிஞ்சியும் முல்லையும் தம் நிலைமை திரிந்து போகுமானால் பாலை ஆகும். இதன் தெய்வம் கொற்கை. பழங்குடி இனங்களிலிருந்து அரசர்களும் வேந்தர்களும் உருவான காலங்களில் குடிகள் சாதிகளாக மாற்றப்பட்டன. முதலில் செய்யும் தொழில் முறையிலும் பின்னர் பிறப்பின் அடிப்படையிலும். குடி என்பது வேறு, சாதி என்பது வேறு. குடி என்பது பிறப்பின் அடிப்படையில் மட்டுமே... சாதி என்பது, பிறப்பின் அடிப்படையிலும், முக்கியமாக தொழில் மற்றும் அகமண முறையிலும் உருவாக்கப்பட்டது. சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும், இந்த காலத்தில் நாம் குறிப்பது போல் இல்லை. அம்பேத்கர் சாதிகளை ஆராய்ந்து அகமணமே சாதிக்குரிய தனித்தன்மை என்று கூறியுள்ளார். 


தமிழகத்தில் சங்க காலத்தில், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்ப பல குலங்கள் தோன்றி இருந்தன. அவற்றுள் சில அளவர், இயவர், இடையர், எயினர், கடம்பர், பரதவர், பறையர், பாணர், வண்ணார், வணிகர், புலையர், தேர்பாகர், துடியர், குறவர், குறும்பர், கூத்தர், கோசர், குயவர், உமணர், உழவர், கம்மியர், களமர், மழவர், கொல்லர், தச்சர், வேடுவர். இவர்கள் இவர்களது குலத் தொழில் செய்து பிழைத்தனர், மேலும் ஒருவருக்கொருவர் மணமும் (புறமண முறை) செய்து கொண்டனர். இங்கு தொழில் மாறலாம், ஆனால் தீண்டாமை பாகுபாடு இல்லை. கீழ்-மேல், உயர்வு-தாழ்வு என்ற நிலை இல்லை.  


குறுந்தொகைப் பாடல் ஒன்றில்


யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்,

செம்புலப் பெயனீர் போல 

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே


இப்பாடல் சங்ககாலத்தில் புறமண உறவுமுறை இருந்ததைப் தெளிவாக சொல்கிறது. இச்சமூகத்தில் சாதி என்ற ஒரு அமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கூறலாம். 


தொடரும்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 2

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 2

சாதிப் பாகுபாடை சங்க காலப் புலவர்கள் பலர் கடிந்து பாடிச் சென்றுள்ளனர். ஆனால், நாம் அதை மறந்து விட்டு பெரியாரை வைத்து அரசியல் செய்கிறோம் என்றே எனக்கு தோன்றுகிறது. 


திருவள்ளுவரோ 


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 

செய்தொழில் வேற்றுமை யான்" என்று கூறி பிறக்கும் போது உயிர்கள் எல்லாம் ஒன்றே என்று சொல்லியுள்ளார். மேலும் மற்றொரு குறளில் 


"பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்

கருமமே கட்டளைக் கல்" என்று சொல்லியுள்ளார். இதையே நாலடியார் தனது 195 வது பாடலில்


நல்ல குலமென்றும் தீய குலமென்றும்

சொல்லளவு அல்லால் பொருளில்லை; - தொல் சிறப்பின்

ஒண்பொருள் ஒன்றோ தவம்கல்வி ஆள்வினை

என்றிவற்றான் ஆகும் குலம்.


நல்ல குலம்' என்றும் 'தீய குலம்' என்றும் கூறுவதெல்லாம் வெறும் சொல்லளவே ஆகும். அப்படிக் கூறுவதில் ஒரு பொருளும் இல்லை. பழமையான சிறப்புடைய மிக்க பொருளும், தவமும், கல்வியும், முயற்சியும் என்னும் இந்த நான்கினால் நல்ல குலம் அமைவதாகும். பிறப்பினால் கீழ் சாதி மேல் சாதி என்று இல்லை. செய்யும் செயலினாலும் அறிவினாலுமே உருவாகிறது என்று சொல்லி சென்றுள்ளார்.


சிவவாக்கியர் என்ற சித்தர் தனது பாடலில் 


நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே 

சுற்றி வந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ


இதில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டை எதிர்க்கிறார். நட்ட கல் பேசப்போவது இல்லை. அதை சுற்றி வந்து புட்பம் இட்டு மந்திரங்கள் சொல்லுவதால் ஒன்றும் பயனில்லை. ஏனென்றால் நாதன் நம் உள் இருக்கிறார். சமைத்த சட்டிக்கும் கரண்டிக்கும் சுவை தெரியாது. அதுபோல் கல்லை வணங்குவதால் பயன் ஒன்றும் இல்லை. ஆனால் இதையே சிலர் வேறு மாதிரியும் பொருள் கொள்ள சொல்கின்றனர். பேசுமோ என்பதை பேசும் ஓம் என்றும் அறியுமோ என்பதை அறியும் ஓம் என்றும் மாற்றினால் இந்த பாடல் வேறு பொருள் தரும். 


மேலும் அவர் ஒரே இனமாக கொள்ள வேண்டிய மனித இனத்தை, சாதிகள் மூலம் வேறுபடுத்தி பார்ப்பதை கூறும் போது


சாதி ஆவது ஏதடா சலந்திரண்ட நீரெல்லாம்

பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ

காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ


என்று கூறுகிறார். சாதி ஆவது என்றாள் என்ன? இவவுலகம் முழுமையும் நீரால் நிரம்பியுள்ளது. அதுபோலவே உயிரும் நீராகத்தான் உள்ளது.  பஞ்ச பூதமும் ஒன்றுதான். காதில் கைகளில் அணியும் நகைகள் எல்லாம் தங்கமே.... அப்படியிருக்க ஒரே இனமான மனித இனத்தை சாதி பேசி பிரிப்பது தன்மையானது அல்ல.


மற்றும் தீண்டாமை பற்றியும் சிவவாக்கியர் கூறியுள்ளார். 


பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா

இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ

பறைச்சி போகம் வேறதோ மனத்தி போகம் வேறதோ

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே


என்று பயங்கரமாக சீறுகிறார். 


திருமூலர் "ஒன்றே குளம் ஒருவனே தேவன்" என்று எழுதினார். பின்னாளில் இது ஒரு திராவிட கொள்கையாக மாறியது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு" என்று தமிழையும் தூக்கி நிறுத்தி உள்ளார். ஆனால் இங்கும் பெரியார் வேறுபடுகிறார். இந்தி வேண்டாம் என்று மும்மொழிக் கொள்கையை எதிர்த்ததில் பெரியாருக்கு முதலில் சம்மதம் இல்லை. முதலில் மறுத்து விட்டு பின் எதிர்த்தார். அதற்கு அவரின் பதில், தமிழ் மட்டும் படிப்பதால், தமிழர்களுக்கு அறிவியல் சம்பந்தமாக பேசவோ, பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணவோ முடியாது என்பது. ஒரு வகையில் அவரின் கூற்று ஒத்துக் கொள்ளப்படவேண்டியதே.


கீழ் வரும் பாடலில், பார்ப்பன எதிர்ப்பையும் அன்றே பாடியுள்ளார், திருமூலர்.


பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர் கொண்ட நாட்டுக்கு பொல்லா வியாதியாம்

பார் கொண்ட நாட்டுக்கு பஞ்சமும் ஆம் என்றே

சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே


மேலும் ஒரு பாடலில் நடமாடும் மனித தெய்வத்திற்கு செய்யும் தொண்டு படமாடும் தெய்வத்திற்கு செய்தது போல் ஆகும் என்று அழகாக விலகுகிறார்.


 படமாடக் கோயில் பகவற்கு ஓன்று ஈயின்

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா 

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஓன்று ஈயின்

படமாக் கோயில் பகவர்க்கு அது ஆமே


இதையே தான் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் ஏன் கோயிலுக்கு சென்று 15 லிட்டர், 20 லிட்டர் பால் ஊத்துறீங்க, அதுக்கு பசிக்கிற ஆளுங்களுக்கு கொடுக்கலாமே என்று கூறுகின்றனர். ஆனால் இவற்றை திருமூலர் என்றோ சொல்லி விட்டார்.


மேலும், ஒவ்வையார் தனது பாடலில் 


"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி" என்று கூறிச் சென்றுள்ளார்.


தொடரும்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1


பெண் விடுதலை வேண்டும். சாதி வெறி தணிய வேண்டும். மத அரசியல் வேண்டாம். ஆனால் இவை எல்லாம் இப்பொழுது அதிகமாகத்தான் உள்ளது. இலக்கியம் என்ற சொல்லே நன்றாக உள்ளது. ஆனால் இப்பொழுது நாம் இந்து இலக்கியம், தலித் இலக்கியம், கிறித்துவ எழுத்துகள்,என்று ஏன் பிரிக்க வேண்டும். இந்த வருட புத்தக திருவிழாவில் கூட சில கருத்துக்களைக் கேட்க முடிந்தது. தலித் இலக்கிய வெளியீடுகள், திராவிட இலக்கிய வெளியீடுகள் என்று..... நாம் வேண்டாம் என்று சொல்லும் விடயங்களைத் தான் இலக்கியம் என்ற பெயரில் நிறைய வருகின்றனவா. இதற்க்கு மேல் ஒருவர் சென்று இரவிக்குமார் படமெடுத்தால் திரைப்படம் அதுவே ரஞ்சித் எடுத்தால் தலித் திரைப்படம். ஜெயமோகன் எழுதினால் இலக்கியம் அதுவே பெருமாள் முருகன் எழுதினால் தலித் இலக்கியம் (ஒரு புலனக் குழுவில் படித்தது). எழுத்தாளர் இமயம் அவர்கள், ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொது, தலித்துகளின் வாழ்க்கையை ஓறு தலித் எழுதினால் அது தலித் இலக்கியம் என்றும், அதையே வேறு ஒருவர் எழுதினால் இலக்கியம் என்று அழைக்கும் போக்கு தவறானது என்றார். தலித் எழுத்து என்றோ தலித் எழுத்தாளர் என்றோ பிரிப்பது சரியல்ல என்பது அவருடைய வாதம்.


மேலும் திருவள்ளுவர் கருத்து முக்கியமா? இல்லை அவருடைய மதம் மற்றும் ஜாதி முக்கியமா... அவருடைய கருத்துக்கள் யுகங்கள் தோறும் மாறி மாறி பல புதிய சிந்தனைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருகின்றன. நாம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அவருடைய மதத்தைப் பற்றி சிந்திப்பது எவ்வளவு ஒரு சிறு பிள்ளைத்தனம். அனைத்திலும் அரசியல் தேவையா? ஆனால் இப்பொழுது அனைத்திலும் அரசியலை காண முடிகிறது. மன்னர் ஆட்சியில் அனைத்திலும் அரசியல் தலையீடு இருப்பதை காண முடியும். ஆனால் இப்பொழுது மக்களாட்சி. அரசியல் தலையீடு எல்லாவற்றிலும் தேவையில்லை. அரசியலைப் பற்றி லெனின் சொன்னது "அதிகாரத்தைக் கைபற்றுவது தான் முக்கியமான விடயம்" 


இன்னும் சில பேர் ஒரு படி மேலே சென்று நான் ஒரு திராவிடன், பெரியாரைப் பின் பற்றுகிறேன் என்று கருத்துக்களை கூற முற்படுகின்றனர். ஆனால், பெரியாரின் சிந்தனைகளை அவருக்கு முன்பேயும் அவர் காலத்திலும் பலபேர் சொல்லி சென்று இருக்கின்றனர். அவர்களில் சிலர், புத்தர், கபீர், இராமானுஜர், திருவள்ளுவர், சிவவாக்கியர், அயோத்திதாசர், அம்பேத்கர், விவேகனந்தர், அய்யாவழி நாராயணர், காந்தி, வள்ளலார் (இராமலிங்க அடிகளார்), போன்றவார்களை கூறலாம். பெரியாரும் இந்த வரிசையில் ஒருவர் தான்.


புத்தர் ஒரு வைதீக எதிர்பாளர். இவரின் இயற்பெயர் சித்தார்த்த கௌதமர். சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார், வைதீகத்தில் உள்ள சாதி மதம், சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தவர். மேலும் ஆசையே துன்பத்திற்கு காரணம். தான் தனது என்ற நிலையில் இருந்து விலகினால் ஞானம் பெறலாம் இதுவே விடுதலை அல்லது நிர்வான நிலை. புத்தரின் சமகால மதங்களாக நாம் சமணத்தையும், வைதீக சமயத்தையும் எடுத்துக் கொள்ளலாம். சமணம், வாழ்கை இல்லல்கள் நிறைந்தது என்றது. ஆனால் புத்தமோ அதற்கு தீர்வு தந்தது. சமண புத்த சமயங்களின் வளர்ச்சிக்கு ஆன்மீக அமைதியின்மையே காரணம். வைதீகம் சடங்குகள் நிறைந்ததாக இருந்தது. இது சாதாரண மக்களின் இன்னல்களை போக்குவதாக இல்லை. மக்களின் இன்னல்களுக்கு வைதீகம் சில சடங்குகளையும் வேள்விகளையுமே முன் வைத்தது. அது போன்ற சடங்குகளை சாமானியர்களால் செய்ய இயலவில்லை. இதன் உணமைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் விளக்க வந்தவையே சமணமும் பௌத்தமும். வைதீகத்தில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எளிய மக்களுக்கு புரியும் படியாக இல்லை. எளிய மக்கள் மோட்சத்திற்கு செல்லவும் வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், தத்துவங்களை தெரிந்து கொள்ளவும் வேறு வழிகள் தேவைப்பட்டன. மேலும் இவைகள் மக்களுக்கு புரியும் மொழியில் இருக்க வேண்டும். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய வந்ததே சமணரான மகாவீரரும், புத்தரான சித்தார்த்தரும். இவ்விரு சமயமும் வணிகச் சமுதயத்தாலும் அவர்களது பங்களிப்பினாலும் வளர்ச்சி கண்டது. மகாவீரரும் புத்தரும் ஆளும் வர்கத்தில் பிறந்தவர்கள். வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் கிடைத்த இடம் வைசியர்களான வணிகர்களுக்கு கிடைக்க வில்லை. ஆனால் வியாபாரத்தின் மூலம் வணிகர்களின் பொருளாதார நிலை மேம்பட்டு இருந்தாலும், வணிகர்கள் மூலமாக அதிக வரி வருவாய் அரசர்களுக்கு கிடைத்தாலும், சமூகத்தில் மூன்றாம் பிரஜையாக கருதப்பட்டனர். கீழ் சாதியினருக்கு பல சலுகைகள் மறுக்கப்பட்டன. எல்லா சலுகைகளும், அரசர்களுக்கும் பிராமணர்களுக்குமே கிடைத்தன. எனவே வணிகர்களும், மற்றவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் ஆதரிக்க தொடங்கினர். புத்தர் கடவுளைப் பற்றி கவலைப்பட்டவர் இல்லை. கடவுளைப் பற்றியோ வைதீகத்தைப் பற்றியோ ஏதாவது கேட்டால் அமைதியாக இருப்பார் பதில் சொல்லமாட்டார். ஆனால் மனித இன்னல்களுக்கான காரணத்தைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவது பற்றியும் மிகத் தெளிவான போதனைகளை வழங்கி விட்டு சென்றார். பெரியாரிடம் அது இல்லை. அவர் இன்னல்களுக்காக குரல் கொடுத்தார் மக்களைச் சேர்த்து போராடினார். ஆனால், அந்த காலகட்டத்திற்கு தேவையான தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் விட்டுச் சென்று விட்டார்.


இப்பொழுது எதை எடுத்தாலும், பெரியாரை மேற்கோள் காட்டுவது என்ற ஒரு தவறான போக்கு வந்து விட்டது. பெரியார் ஒரு கருத்தை ஏன் சொன்னார், எதற்காக சொன்னார், அதன் விளைவு என்ன? என்று தெரியாமல், நான் பெரியாரை படித்தேன் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று சில வரிகளைக் கொண்டு விளக்க முற்படுகின்றனன்ர். இது ஒரு தவறான போக்கு. அது மாற வேண்டும். பெரியாரின் மிகப் பெரிய கொள்கை, எதையுமே உயர்த்தி பிடிக்காதே. தமிழை உயர்த்தினால், உடனே அது ஒரு காட்டு மிராண்டி மொழி என்றார். தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பதை கண்டித்தார். கண்ணகிக்கு சிலை வைத்து அதை பாராட்டிய பொழுது கடுமையாக நடந்து கொண்டார். கடவுள் வழிபாடு என்று ஒரு கூட்டம் சென்ற போது அதை கண்டித்தார். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார். புத்தர் கூட கடவுள் இல்லை என்று தான் கூறினார். ஆனால், புத்தமதம் வளர்ந்து அது ஒரு நிறுவனமயப் படுத்திய போது புத்தரே கடவுளானார். குரு என்ற நிலையில் இருந்து கடவுள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.


பெரியார் பெண் விடுதலை பற்றி பேசினார், கட்டுபாடற்ற பாலுணர்வு பற்றி பேசினார், பாலுணர்வு சுதந்திரம் பற்றி பேசினார் என்று தனக்கு தேவையான சில கொள்கைகளை மட்டும் எடுத்துப் பேசும் கூட்டம் ஓன்று உருவாக்கி உள்ளது. இதனால், வரப்போகும் பாதிப்பு என்பது மிகப் பெரியது. முக்கியமாக கற்பு என்பது தமிழ்ப் பண்பாடா? என்றால் இல்லை. காதலும் களவு மனமும் தமிழ்ப் பண்பாடு. ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் பிறக்க ஒரு விதமான ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது. உண்மையான அன்பும், புரிதலும், நம்பிக்கையும் வேண்டும். இல்லையென்றால் அது காதல் அல்ல. இவை மூன்றும் இல்லையென்றால் அது, கட்டுபாடற்ற பாலுணர்வு கொள்கை அல்லது பாலியல் புரட்சி ஆகும். இந்த மூன்றும் இல்லாத உறவு காதல் அல்ல அது தமிழ்ப் பண்பாடும் அல்ல. இந்த விடயங்களை இன்றைய தலைமுறையிடம் நாம் சரியாக கொண்டு செல்லாவிட்டால் நாம் பேசும் சமூக நீதி கேள்விக்குள்ளாக்கபடும். சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு மட்டுமே அல்ல. அதையும் தாண்டி. 


பெரியார் பெண்கள் மட்டுமே ஒழுக்க விதிகளுடன் வாழவேண்டும், ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருந்த சமுதாயத்தில் சொன்ன கருத்துக்களை இப்பொழுது பொருத்திப் பார்ப்பது தவறு. பாரதியார் கூட, கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றார். பெரியார் அவருடைய பாணியில், "கணவனைத் தவிர பெண் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமை வேண்டும்" என்றார். விசயங்களை மொத்தமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது புதிதாக வந்த பெரியாரியவாதிகளும், போலி முற்போக்காளர்களும் பேசுவதைப் பார்த்தால், பயமாக இருக்கிறது. மீண்டும் நாம் காட்டு மிராண்டி வாழ்க்கைக்கு திரும்பி விட்டோமா என்று. பெரியார் கேட்டது என்னவென்றால் பெண்ணுக்கு வகுக்கப்பட்ட ஒழுக்க நெறி ஆணுக்கு ஏன் வகுப்படவில்லை. பெரியார் வகுக்கப்பட்ட ஒழுக்கத்தைதான் எதிர்த்தாரே ஒழிய சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீரழிய வேண்டும் என்று சொல்லவில்லை.

தொடரும்

Tuesday, February 8, 2022

மூவேந்தர்

 மூவேந்தர் - 08.02.2022

 மூவேந்தர் என அழைக்கப்படுபவர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களாவர். இவர்களே பண்டைய தமிழகத்தையும் தென்னிந்தியா முழுமையுமே ஆண்டவர்கள். இவர்களில் பாண்டியர்கள் நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளவர்கள். உலகத்திலேயே மிக நீண்ட நெடுங்காலம் ஆண்ட மரபை உடையது பாண்டிய பேரரசு. எந்த மன்னர் குலத்துக்கும் இல்லாத நீண்ட வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. 

 பாண்டியர்களின் கொடி மீன் கொடியாகும். இவர்களின் தலைநகரம் மதுரை ஆகும். வைகை ஆற்றுப் பகுதியே பாண்டியப் பகுதியாகும். மற்றொரு வற்றாத ஜீவ நதி தாமிரபருணியும் ஓடியது. பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளாக மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளாகும். இவர்கள் வேப்பம்பூ மாலை அணிவார்கள். பாண்டியர்கள் தங்கள் பெயர்களுடன் மாறன், வழுதி, வர்மன், செழியன், முதுகுடுமி போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். பாண்டிய முத்துக்கள் உலகத்திலேயே மிகர் சிறந்த முத்துக்களாக கொண்டாடப்பட்டன.  இவர்கள் கிபி 14-ம்  நூற்றாண்டு வரை சிறப்பாக இப்பகுதியை ஆண்டனர். 

 சோழர்களின் கொடி புலிக் கொடியாகும். நெல் அதிகமா விளையும் பகுதி சோழ நாடாகும். "சோழநாடு சோறுடைத்தது" என்பது பழமொழி. சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுபடுகையிலேயே தோன்றியது. கிபி 2-ம்  நூற்றாண்டுக்கு பின்னர் வலிமை குறைந்து சிற்றரசராகி பின் கிபி 9-ம்  நூற்றாண்டில் மீண்டும் வலிமை பெற்றுத் தெற்காசியா முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்ட வம்சம். கிபி 13-ம்  நூற்றாண்டு வரை சோழராட்சி நிலவியது. பின் மீண்டும் சரியத் தொடங்கியது. சோழர்கள் அத்தி மாலை அணிந்திருந்தனர். இவர்கள் தங்களை சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சென்னி, வளவன், கிள்ளி, ஆதித்யன், இராஜராஜன் போன்ற ஓட்டுகளைச் சேர்த்துக் கொண்டனர்.. 

 சேரர்கள் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியை ஆண்ட மன்னர் வம்சம் ஆகும். கரூர் மற்றும் வஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். இப்போது கேரளா மாநிலமாக உள்ள சில பகுதிகளும், தமிழகத்தின் கோவை மற்றும் கன்னியாகுமரிப் பகுதிகளும் சேர நாட்டுப் பகுதிகளாகும். அமராவதி, நொய்யல் மற்றும் பேரியாறு போன்ற நதிகள் உள்ளன. மலைகளுக்கும் மலையில் விளையும் வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்ற நாடாகும். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சேரலாதன், குட்டுவன், கடுங்கோ, குடக்கோ, இரும்பொறை, வாழியாதன், கோதை, மாக்கோதை போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். சேரர்களின் மாலை பனம்பூ ஆகும். இவர்கள் தங்களை அக்கினிக் குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர்

Tuesday, August 10, 2021

ஒரு சிறு உரையாடல் - திருவள்ளுவரைப் பற்றி....

 [11:46 AM, 7/29/2021] Hong Kong Somu Annan: "ஆதிபகவன் முதற்றே"   "ஆதிபகலவன்"   இதில் எது சரி ? இதுவரை உரை எழுதிய யாரும் ஏன் பகலவன் என்று பொருள் கொள்ளவில்லை ?

[11:55 AM, 7/29/2021] RM S Viswanathan: ஆதி பகவன் என்பதே சரி..... இதுவரை உரை எழுதியவர்கள் எல்லாம் பகவன் என்றே எழுதியுள்ளனர். 

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து – குறள் 1 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. 

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

[12:14 PM, 7/29/2021] Hong Kong Somu Annan: பகலவன் என்று சூரியனையும், நீரின்றி அமையாது உலகு என்பதில் வருணனையும் பொருள்படக் கூறியிருந்தாரேயானால் வள்ளுவர் ஒரு இந்து தானே ?

[12:37 PM, 7/29/2021] RM S Viswanathan: இந்த கோட்பாடு சிரமண மதங்களிலும் உண்டு. இவர் இந்துவா, ஆசீவகரா, சமணரா அல்லது புத்தம் சார்ந்தவரா என்ற ஒரு பெரிய ஆராய்ச்சி இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 

திருவள்ளுவரும், சமயமும்

திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

திருவள்ளுவரும், சைவமும்

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

அயோத்திதாசரும் தன்னுடைய திருவள்ளுவ ஆராய்ச்சியில் திருவள்ளுவரை சமண மதத்தவராகவே காண்கிறார். மேலும், திருவள்ளுவர் தனியாக தந்து உள்ள ஊழ் என்னும் அதிகாரமும் ஒரு காரணம். 

அறத்துப்பாலில் வள்ளுவர் மூன்று இயல் வைத்து உள்ளார். அதில் இல்லறவியலுக்கு 20 அதிகாரமும், துறவறவியலுக்கு 13 அதிகாரங்களும், ஊழியலுக்கு ஒரே ஒரு அதிகாரமும் தந்து உள்ளார். 

ஆனால், அவர் எச்சமயமோ, அவரின் குறள் இப்பொழுதும், படிக்கும் தோறும் புது புது அர்த்தத்தை காலத்திற்கு தகுந்தார் போல் தந்து கொண்டு இருக்கிறது.

Thursday, August 5, 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

 Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of Aug 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். ஈகை என்ற வார்த்தைக்கு தற்போதைய சூழ்நிலையில் ஞானம் தர்மம் என்ற இரண்டு பொருள்களையுமே எடுத்துக்கொள்ளலாம். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், தன்னிடம் உள்ள பொருளைத் தேவைப்படுவோருக்கு கொடுப்பதும் ஒரு தலைவனுக்கு அழகு. அறிவூக்கம் என்பதை அறிவு + ஊக்கம் என்று பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபட்டுள்ள துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவனாக இருப்பதும் ஒரு செயலைத் தொடர்ந்து வெற்றி கரமாக செய்ய ஊக்கமுடயவனாக  இருப்பதும் ஒரு தலைவனின் மிகச் சிறந்த இயல்பு.

திருக்குறளும் தலைமை தத்துவமும்-1

Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of July 2021

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும் !,  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காணவேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை  அல்லது குரு என்று அழைக்கப்படும் பீட்டர் ட்ரட் க்கக் ர் கருத்துப்படி "தலைவர்க ளின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்று ம் அதனை எவ்வாறு செயல்படுத்துத்துவது என்பதே".  

நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக் க்குக நூலான திருக்குக் றளில், வள்ளுவர் 

"வெள்ளத்து அனைய மலர்நீர் நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத்தனையது உயர்வுர் " - என்று கூறுகிறார். 


ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும்  நாம் பெரும் வெற்றியும்.        நீரில் இருக்குக் ம் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்தந் அளவு நீளம் உள்ளதாக இருக்கும், நீரின் ஆழம் அதிகரிக்கக் அதிகரிக்கக் த் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்தந் அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

Thursday, July 8, 2021

மூதுரை பாடலும் & நண்பர் கேட்ட நல்ல ஒரு கேள்வியும்

பாடலும் விளக்கமும்

வெண்பா : 13
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

விளக்கம்
கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல. சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்

 கேள்வி :

மரம் அவ்வளவு மட்டமான உயிரினமாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வள்ளுவர் குறளிலும் இந்த விதமான குறியீடு உள்ளன. இதை விளக்கமாக தெளிவாக்க தெரிந்த அன்பர்கள் பதிலளிக்கவும் நன்றி.

 என்னுடைய விளக்கம்.

 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

 "பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து

ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" 

 

சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

 

தொல்காப்பியம் தரும் விளக்கமும் இதுவே....

“வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்”

 

மரம் என்பது ஒரு மிகப்பெரிய தாவரம். ஆனால் உயிருள்ளது. அதற்கு மிருகங்கள் பறவைகள் மனிதர்கள் போன்று வாழத் தெரியாது. மரங்கள் ஒரே இடத்தில் தோன்றி ஒரே இடத்தில் மறையும். மரம் ஒரு ஓரறிவு உயிரினம். மனிதனுக்கு ஆறறிவு உண்டு. இதனை வள்ளுவர் தனது குறளில் மக்கட்பண்பு என்று கூறுவார்.

 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்

[பொருட்பால், குடியியல், பண்புடைமை]

இதன் பொருள் : மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

 

மரத்தினால் மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் மிகப் பெரிய நன்மைகள் கிடைகின்றன. இங்கு மரத்தை உவமை கூறியது. அதன் பண்பினால் மட்டுமே, அதன் பயனால் அல்ல.

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

 

“கல்வி அறிவு இல்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாலும் ஒரறிவுடைய மரத்தினை விட தாழ்ந்தவர்” என்ற அர்த்தத்திலேயே ஔவையார் கூறியுள்ளார். மேலும் அவர் மரங்களை சிறுமைப்படுத்தவில்லை. இவனைக் காட்டு மரங்கள் என்று சொன்னால் மரங்களே கோபித்துக் கொள்ளும் என்றும் இவன் அவற்றைவிட மோசமான மரம் என்னும் சுவையிலேயே இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவே இந்த பாடலின் உச்ச சுவை.

திருக்குறளும் தலைமைத்துவமும்

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும், வாழ்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காண வேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை அல்லது குரு என்று அழைக்கபடும் பீட்டர் ட்ரக்கர் கருத்துப்படி "தலைவர்களின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதே". 


நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறளில், வள்ளுவர்,

"வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் 
உள்ளத்து அனையது உயர்வு"  - என்று கூறுகிறார்.

ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும் நாம் பெரும் வெற்றியும். நீரில் இருக்கும் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்த அளவு நீளம் உள்ளதாக இருக்கும்,  நீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்கத் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர்கள் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.   

எண்ணங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதை செயல்படுத்த மனதில் உறுதி வேண்டும். இதை திருவள்ளுவர் உறுதி, துணிவு, அஞ்சாமை என்று பல விதங்களில் கூறுகிறார். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். அச்சமே நம் முதல் எதிரி. அச்சம் இல்லையென்றால் ஒருவரால் தனது கனவை நோக்கி முன்னேறிச் சென்று வெற்றி பெற முடியும்.  உதாரணமாக நாம் ஒரு தொழிலை தொடங்க முற்படுகிறோம் என்றால், அந்த தொழிலில் ஏற்கனவே உள்ளவர்களைப் பார்த்து அஞ்சி நிற்கக் கூடாது. அவர் முன்னேறியதைப் போலவே நாமும் முன்னேற வேண்டும் என்று எண்ணம் கொண்டு அதையே நகல் எடுத்துச் செய்யவும் கூடாது. இலக்குகள் ஒன்றே. அனால் அதை அடைவதற்கு, நம்முடைய வழியில் சென்று வெல்ல துணிவு வேண்டும்.  

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு".

ஒரு செயலை செய்வதற்கு முன் அதைபற்றி நான்கு யோசித்து ஒரு நல்ல திட்டம் தயாரிக்க வேண்டும். திட்டம் தயாரானதும் செயல்படுத்த வேண்டும். செயல்படுத்தப்பட்டபின் திட்டம் தயாரிப்பது  அல்லது அதை பற்றி சிந்திப்பது நமக்கு தோல்வியையே தரும்.  துணிந்து இறங்கிய பின், அதைபற்றிக் கவலை கொள்ளக் கூடாது. அதில்  வெற்றியோ தோல்வியோ, இரண்டுமே நல்ல பலன்கள் தான். வெற்றி நமது பெருமையை மற்றவருக்கு சொல்லும். தோல்வியோ, நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். இதையே மற்றொரு குறளில் 

"தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்"

இலக்குகள் தீர்மானித்தபின், அதை பற்றி நான்கு தெரிந்தவர்களுடன் உரையாடி, தாமாகச் சிந்தித்து செய்பவர்களுக்கு தோல்வி என்பதே இல்லை ஏன்று பொருள் கொள்ளலாம். 

"அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் 
தஞ்சம் எளியன் பகைக்கு"

இக்குறளில் அச்சம் கொண்டவனும், கல்வி அறிவு இல்லாதவனும், பிறரோடு ஒத்துக் குழுவாகச் செயல்படும் தன்மை இல்லாதவனும், கொடை அளிக்காதவனும் பகைவரால் எளிதில் வீழ்த்தப்படுவான். இதையே தான் வேறு மாதிரியாக இந்தக் கட்டுரையின், இரண்டாவது குறளிலும் கூறுகிறார் வள்ளுவர். ஒருவரை பார்த்து நாம் அஞ்சத் தொடங்கினால், அவ்வச்சமே நம் ஆற்றலைக் குறைத்து எதிரியை ஜெயிக்க  வைத்து விடும். 

ஈகை என்பது ஒரு தலைவனுக்கு வேண்டிய மிகச் சிறந்த பண்பாகும். திருவள்ளுவர் அவர் காலத்தில் ஈகை என்பதை, படை மற்றும் குடிகளுக்கு அரசர் வழங்கும் கொடை என்றே கருதியிருக்கலாம். ஆனால் தமிழ் இலக்கியம்  ஒரு கடல். கடல் மீனவனுக்கு மீனை  கொடுக்கும், உப்பு குரவனுக்கோ உப்பை கொடுக்கும். உலகம் செழிப்பாக இருக்க எல்லோருக்கும் மழையை கொடுக்கும். காற்றைக் கொடுக்கும். இது போலே தமிழும், குறளும் ஒரு கடல். படிப்பவர்களுக்கு படிக்கும் சூழ்நிலைகளுக்கு, ஏற்ப காலத்துக்கு ஏற்ப தமிழ் இலக்கியம் புதுப் புது அர்த்தத்தை தந்து கொண்டே இருக்கும்.  என்னுடைய நண்பர் ஒருவர், மிகுந்த தெய்வ நம்பிக்கை உள்ளவர். வழக்கமாகக் கோயில் திருவிழாக்களில் தமிழ் தேவாரம், திருப்புகழ் பாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் ஒருமுறை பேசும் போது, நான் கோயில்களில் தவறாமல் தமிழ் திருமுறைகளைப் பாடுவதில் விருப்பம் கொண்டவன், ஆனால், ஒவ்வொருமுறை பாடும் போதும் அது எனக்கு ஒரு புது அர்த்தத்தைத் தருகிறது என்றார். அது போல தான் இந்த கருத்தும். இந்த இடத்தில நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஈகை என்பது, தன்னிடத்தில் உள்ளவற்றை மற்றவர் நலனுக்காக கொடுப்பது. ஒரு தலைவனுக்கு, இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று ஈகை. தலைவனிடம் ஒரு செயல் திட்டம் இருக்கும். ஆனால், அது அவனுடன் கூட இருபவர்களுக்கோ, அவனுக்கு கீழ் இருப்பவர்களுக்கோ  எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று தெரியாது. அதை ஒரு தலைவனே, மற்றவர்களுக்கு விளக்க வேண்டும். அதுதான். இப்பொழுது மிகப் பெரிய கம்பனிகளில் நடக்கும் செயல் விளக்க கூட்டங்கள். 

அறிவூக்கம்  - அறிவு மற்றும் ஊக்கம்... அறிவு என்பது முடிவில்லாத ஒரு ஞானம். வள்ளுவர் இதனை ஒரு குறளில்,

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

மணலில் தோண்டிய அளவு நீர் ஊறுவதைப் போல, மக்கள் கற்கும் அளவு அவர்களின் அறிவு வளரும் என்பது வள்ளுவரின் வாக்கு. ஒரு தலைவன் என்பவன் தன்னை எப்பொழுதுமே வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னையும், தன்னைச் சுற்றியும் நடப்பவற்றை அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும். தன்னை எப்பொழுதுமே வளப்படுதிக் கொண்டே செல்ல வேண்டும். இல்லையென்றால், புதுப் புது தொழில் நுட்பங்களையும், வளர்சிகளையும் தெரிந்து கொள்ள முடியாமல் காலத்திற்குத் தகுந்தார் போல் தம்மை மாற்றிக் கொள்ள முடியாமல் போகும். ஞானத்திற்க்கு என்று ஒரு அளவு கோல் இல்லை. கற்க கற்க வளர்ந்து கொண்டே இருக்கும். ஒரு தலைவனுக்கு அழகு மற்றவர்க்கு கேடு விளைவிக்காத அறம் சார்ந்த செயல்களையேச் செய்ய வேண்டும். அதற்கு கல்வி அறிவு வேண்டும். இதை வள்ளுவர் மேலே குறிப்பிட்ட ஒரு குறளில் "அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு" என்றார். 

இது இருந்தால் மட்டும் போதாது. ஒரு தலைவனுக்கு தேவை ஊக்கம். ஒரு செயலை செய்யும் பொது அதை பாதியிலேயே விட்டு விடாமல் தொடர்ந்து செய்து சாதிக்க ஊக்கம் வேண்டும். ஒரு செயலில் நமக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும் போது ஊக்கம் தானாகவே வரும். ஈடுபாடு குறைந்து, கடமையே என்று செய்தால் ஊக்கம் வராது. ஈடுபாடு, எப்பொழுது வரும்? ஒரு செயலை நாம் மிகவும் விரும்பி செய்தால் ஈடுபாடு வரும். 

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"

எந்த ஒரு செயலையும் விரும்பிச் செய்தால் வெற்றி காண முடியும். ஆளுமைதிறன் என்பது என்னால் இதை செய்ய முடியும் என்பதே. இதையே தான் மேலாண்மை நூல்களில் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். அதையே திருவள்ளுவர் தமது குறளில் ஒன்றேமுக்கால் அடியில் சொல்கிறார். 

"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை 
இன்மை புகுத்தி விடும்"

முயற்சிகள் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம். இரண்டுமே நமக்கு ஒரு நல்ல படிப்பினையைத் தரும். ஆனால் முயலாமல் இருப்பது, தோல்வியே.... அதில் நமக்கு எந்த ஒரு படிப்பினையும் கிடைக்கப் போவதில்லை. அதனால் கிடைக்கும் பயன்கள் சோகம், வருத்தம், பொறாமை, கடன், கஷ்டமே....

நமக்கு எல்லோருக்கும் தெரிந்த ஒரு மிகப் பெரிய விஞ்ஜானி, தாமஸ் ஆல்வா எடிசன், அவருடைய ஒரு பொன்மொழி, "என்னுடைய முயற்சிகள் என்னைப் பல தடவை கை விட்டதுண்டு, ஆனால் நான் ஒரு முறை கூட என் முயற்சியைக் கை விட்டதில்லை". 

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

Monday, November 20, 2017

ஆசீவகம் - ஒரு கண்ணோட்டம்

பழங்கால மத சம்பிரதாயங்களை பற்றி பார்க்கும் போது, சில முரண்பாடுகளை சொல்ல வேண்டியுள்ளது. பழங்கால மதங்களான ஆசீவகம், சமணம் மற்றும் புத்தம், மேலும் முஸ்லிம் & கிறிஸ்டியன் ஒப்பிடும் பொது, சிலபல பொதுவான குணங்களும் மாறுபட்ட கருத்துக்களும் வருகின்றன.

ஒருவர் சொல்கிறார், ஆசீவகமே முதல் மதம் என்று. மற்றொருவரோ சமணத்திலிருந்து பிறந்த குழந்தைகளே புத்தமும், ஆசீவகமும் என்கின்றனர். இது எப்படியோ நமக்கு எல்லாம் ஆதியில் ஒரு வாழ்கை நெறிமுறை என்று ஓன்று இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து தான் மாற்றங்கள் வந்திருக்க வேண்டும். நான் சொல்வது எல்லா மனித குலங்களுக்குமே......

திருவள்ளுவர் ஒரு அசீவகரே என்று சிலர் கூறுகின்றனர். ஏனென்றால் அவருடைய கடவுள் வாழ்த்து பாடலாகிய முதல் குறளில் "ஆதி பகவன்" என்றே கூறுகிறார். எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை பற்றியோ கடவுளைப் பற்றியோ குறிப்பிடவில்லை என்கின்றனர். ஆதி பகவன் என குறிபிடுவது சிவனை பற்றித்தான் என்றும், சிவனும் ஒரு சித்தரே என்றும் சொல்கின்றனர். ஏனென்றால் அசீவகத்தில் தனிப்பட்ட கடவுள்கள் என்று ஒன்றில்லை என்றும், அறிவில் சிறந்தவர்களை அறிவர் என்று அழைப்பதும் அவ்வாறு அறிவில் சிறந்தவரான சிவனும் ஒரு காலத்தில் வாழ்ந்தார் என்றும் அவர் தான் ஆதி யோகி ஆன சிவன் என்றும் குறிப்பிடுகின்றனர்

அய்யனார் வழிபாடும் அசீவகத்தை ஒத்தது என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். சப்த முனி வழிபாடும், சப்த கன்னிகை வழிபாடும் அசீவகத்தை ஒத்து உள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். அறிவனார் வழிபாடு, அய்யனார் வழிபாடு என்று வந்ததா என தெரியவில்லை.

நிறங்களே ஆசீவகத்தின் கோட்பாடு என்று ஓன்று உண்டு. கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை. இவைகள் எல்லாம் ஞானத்தின் நிறங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கருப்பு துவக்க நிலையையும், வெள்ளை கடை நிலையையும் குறிப்பதாக அமைந்துள்ளன. இந்த கோட்பாடை ஒட்டியே சப்த கன்னிகைகள் வழிபடும் இடங்களில், அவர்களின் நிறங்களாக உள்ளன. 

மேலும் யானையும் , காளையும் இந்த கோட்பாடிலிருந்து வந்ததாகவே கருதப்படுகின்றது. யானை பிறக்கும் பொது முழுவதும் கருப்பாக பிறக்கிறது. நாட்கள் செல்ல செல்ல அதன் நிறம் மாறிக்கொண்டே வெண்மைக்கு செல்கிறது. அதனால் தான் அவரை விநாயகராக மாற்றி இந்துக்களின் முதற் கடவுளாக மாற்றிவிட்டனர் என்றும் சொல்கின்றனர். 

மேலும் முருகன் வழிபாடு, கொற்கை வழிபாடு, காளி வழிபாடு, ஐயப்பன், கருப்பர் மற்றும் அய்யனார் வழிபாடும் இதிலிருந்தே பெறப்பட்டது என்ற கருத்தும் உள்ளது.

மேலும் தொடரும்

விஸ்வநாதன்

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...