Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Wednesday, February 9, 2022

புதியதலைமுறை

 புதியதலைமுறை - 06.02.2022


புவனேஷ் ஒரு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வேலைக்கு வந்த ஒரு இளைஜன். இவனுடைய முதலாளி நகரத்தில் புதிதாகத் துவங்கிய ஒரு கிளைக்கு இவனை மேனேஜராக நியமித்து இருந்தார். இவனும் இவனுண்டு இவன் வேலை உண்டு என்று இருந்து வந்தான். வேலையும் கையுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு படியேறிச் செல்லும் போது எதிர்த்த வீட்டு மாடியில் ஒரு பெண் ஒரு பாட்டிக்கு உதவியாக நடந்து செல்வதை எதேச்சையாக பார்த்தான். அவள் இவனைக் கவனிக்கவில்லை. இவனும் தற்செயலாக ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் பார்த்துச் சென்று விட்டான்.

ஒரு நாள் புவனேஷ் ஆபிஸ் செல்வதற்காக கிளம்பினான். நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு காலை வேளை. மிகவும் ரம்மியமான ஒரு சூழல். ரசித்துக் கொண்டு நின்றிருந்தான். வெய்யில் பூமியில் பிறந்த ஒருவனுக்கு மழை என்றால் கேட்கவா வேண்டும். மழை என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். இருப்பதை விட இல்லாததை நினைத்துக் கொண்டாடுவது மனித இயல்பு. 

கவிதா நர்சிங் முடித்து விட்டு ஒரு வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள். அவர்கள் வயதானவர்களைக் கவனிக்க ஹோம் நர்ஸ் அனுப்பும் சர்வீஸ் செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொள்வார்கள். அதில் ஒரு பகுதி அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். அவளும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு ஒரு வீட்டில் ஹோம் நர்ஸாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது வேலை செய்யும் வீட்டில் ஒரு வயதான 85 வயது நிறைந்த ஒரு பாட்டி இருக்கிறாள். அவர்கள் வீட்டின் எதிபுற மாடியில் தான் புவனேஷ் குடியிருக்கிறான். கவிதா பாட்டிக்கு உதவி செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவளின் பொழுது போக்கு மொட்டை மாடியில் நிழலில் நின்று வேடிக்கை பார்ப்பது தான். அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது, யதேச்சையாக வேலைக்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்த புவனேஷை கவனித்தாள். இவளைப் போலவே அவனும் மழையை ரசித்துக் கொண்டிருந்தான். கவிதா காலை மற்றும் மாலை வேலைகளில் இவனைக் கவனிக்க தவறுவதேயில்லை. அவளுக்கொரு சிந்தனை. யார் இவன்? காலையில் கிளம்பினால் இரவுதான் வருகிறான் அதுவும் மிகவும் தாமதமாக. எப்பொழுதுமே வேலை தானா. என்ன வேலை செய்கிறான். ஏதாவது சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருக்கிறானா? இந்து வந்து சில நாட்கள் ஆகி விட்டன. ஆனால் மாடியில் அதிகமாக காண முடிவதில்லேயே? என்று தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தாள். 

அவளும் மழையில் நனைந்து கொண்டு மழையையும் மழையால் குளித்த ஊரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மழை பூமிக்கு இறைவனால் கொடுக்கப் பட்ட ஒரு கொடை. பாவப்பட்ட மனிதனின் கண்ணீரை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கான அருட்கொடை. உழவனின் உணவு உற்பத்திக்காக கடவுள் கொடுத்த முதலீடு. ஓடும் மழை நீர் மனிதனின் மன அழுக்கை துடைத்து புது மனிதனை மனிதத்தை உருவாக்க நினைக்கிறது. ஆனால் மனிதன் மனிதத்தை மறந்து போனான். 

"கவிதா........ " பாட்டி அழைப்பது கேட்டது. 

"சொல்லுங்க பாட்டி "

"எனக்கு உட்கார்ந்து இருக்கக் கொஞ்சம் சிரமமாக உள்ளது. என்னை கொஞ்சம் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வை, அப்புறம் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்."

"இதோ தருகிறேன் பாட்டி"

பாட்டிக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து விட்டு, உணவுக்கு முன் சாப்பிட வேண்டிய சில மருந்துகளையும் கொடுத்துவிட்டு, பின் மெதுவாக கைத்தாங்கலாக பாட்டியை அழைத்துச் சென்று அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டிலில் படுக்க வைத்து, தலைப் பகுதியை சற்று உயர்வாக வைத்தாள். பாட்டி சாப்பிடுவதற்கு இன்னும் அரை மணி நேரம் உள்ளது. அரை மணி நேரம் கழித்து உணவு எடுத்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் மாடிக்கு வந்தாள். மழை நின்று விட்டது. எதிர்த்த வீட்டு மாடியிலும் அவனைக் காணவில்லை. வேலைக்கு சென்று விட்டான் போலும். 

புவனேஷ் அன்று அலுவலகம் செல்லாமல் நேராக வாடிகையாளரை காண சென்றான். வாடிக்கையாளர் இன்று தருவதாக சொன்ன காசோலையை வாங்கிக் கொண்டு "வேறு ஏதாவது ஆர்டர்கள் இருக்கா?" என்று கேட்டான். வாடிக்கையாளரும் "எங்கே சார் ஆர்டர்? முன்னாடி மாதிரியெல்லாம் வியாபாரம் இல்லை சார். எல்லோரும் குவாலிட்டி பார்க்காமல் விலையைத்தான் பார்கிறார்கள். அப்ப எல்லாம் வாங்கும் பொருள் நல்லதா இருக்கா? இது தேவையா? எவ்வளவு நாள் நாம் உபயோகிக்க முடியும் என்று பார்த்து வாங்குவார்கள். இப்பொழுது எல்லாம் கண்ணுக்கு கவர்ச்சியாகவும் விலை மலிவாகவும் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள்" 

"அம்மாடி....." என்று கடையின் உள்ளே திரும்பி வேலை செய்யும் பெண்ணைப் பார்த்து "ஏதாவது வேண்டுமாம்மா" என்று கேட்டார். அவளும் ஒரு துண்டு சீட்டில் தேவையான பொருட்களை எழுதி புவனேஷிடம் தந்தாள். 

வாங்கிக் கொண்டு அலுவலகம் வரும் போது மதியம் ஆகி விட்டது. புவனேஷ் அந்த ஆர்டரை ஒரு ஓரமாக வைத்து விட்டு ஆபிஸ் பையனை அழைத்து அந்த காசோலையை பாங்கில் செலுத்திவிட்டு வருமாறு பணித்தான். பின் தன்னுடைய வேலையில் முழுகி விட்டான். ஆங்கிலத்தில் சொல்வது போல வொர்க்கஹாலிக். வேலை என்று வந்து விட்டால் அது முடியும் வரை உலகம் கண்ணை மூடிக் கொள்ளும்.

கவிதாவும் மாடிக்கு வரும் போதெல்லாம் அவளை அறியாமல் எதிவீட்டைப் பார்ப்பதை ஒரு வழக்க்கமாக வைத்து இருந்தாள்.  ஏன் இப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. எதிர்வீட்டு மாடிக்கு அருகிலேயே இன்னொரு வீடும் கட்டப்பட்டு கொண்டிருந்தது. வீடு மேலே எழுந்து முதல் தளம் வரை வந்து விட்டது. அதில் எல்லோருமே வெளி மாநிலத்தவர். அங்கேயே தங்கி, அங்கேயே சமைத்து, உண்டு, உறங்கி வேலை பார்த்து வந்தனர். அதனால் வேலையும் சீக்கிரமாக நடந்தது. அதையும் வேடிக்கை பார்த்தாள். பாட்டிக்கு காலை மாலை இருவேளை வாக்கிங் அழைத்துச் செல்வது, மூன்று வேளை உணவு எடுத்து வந்து கொடுப்பது, மாத்திரை மருந்து கொடுக்க வேண்டிய நேரத்துக்கு கொடுத்து விட்டால் வேறு வேலை ஒன்றும் இல்லை. பின் பாட்டி அழைத்தால் உதவிக்கு செல்ல வேண்டும். பாட்டிக்கு ஓய்வு அதிகம் தேவைபடுவதால் டிவியும் பார்க்க முடியாது. அது ஒரு விதமான தனிமை.

அன்று இது போல் ஒரு காலை வேளையில் நித்தியபடியாகச் செய்யும் எல்லா வேலையும் முடித்துவிட்டு மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமல் அவளின் பார்வை எதிர் வீட்டு மாடிக்கு சென்றது. மணி சுமாராக 11 இருக்கலாம். புவனேஷ் வீட்டின் கதவு திறந்து இருந்தது. சாதாரணமாக இந்த வேளையில் கதவு திறந்து இருப்பது இல்லையே என்ற சந்தேகப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது புவனேஷ் வீட்டைப் பூட்டிக் கொண்டு எதோ ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினான். கவிதா எதோ ஒரு உந்துதல் காரணமாக தன்னை அறியாமல் அவனைப் பார்த்து கையை அசைத்தாள். ஆனால் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தன்னை தானே நொந்து கொண்டு, செய்தது தவறு என்று உள்ளுணர்வு பயம் காட்ட, திரும்பாலாம் என்று நினைத்தவளுக்கு அங்கே புவனேஷும் கை காட்டுவது போல் தெரிந்தது. இவள் சிரித்தாள். அவனும் இவள் சிரிக்கிறாள் என்று தோன்ற அவனும் சிரித்து வைத்தான். பின் கிளம்பிச் சென்று விட்டான். இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்தான். அவளும் எதிர் மாடியில் இருந்து சைகை மூலம் எங்கே காணோம் என்று கேட்க இவனும் சைகை மூலமே வெளியூர் சென்றதை தெரிவித்தான். இந்த சிரிப்பும் கையசைப்பும் சில நாட்கள் தொடர்ந்தன. 

ஒருநாள் கவிதா மாடியில் இருந்து கொண்டு போன் நம்பர் என்ன என்று சைகை செய்தாள். இவனும் சைகை மூலமே நம்பரைச் சொல்ல அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் பாட்டி அழைப்பதைக் கேட்டு உள்ளே சென்று விட்டாள். 

புவனேஷ் அன்று இரவு தன்னுடைய மொபைல் நம்பரை ஒன்று ஒன்றாக பேப்பரில் எழுதி அவற்றை முறையாக வெட்டி நம்பர் கார்டு செய்தான். அடுத்த நாள் ஆபிஸ் கிளம்பும் போது அதையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். சாரல் மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சாரல் மழை காரணமாக பக்கத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலார்கள் மழைக்கு நனையாமல் ஓரமாக ஒதுங்கி நின்று இருந்தனர். கவிதாவும் பாட்டிக்கு தேவையான ஒத்தாசைகள் எல்லாம் செய்து முடித்துவிட்டு தனிமையைக் கழிக்க மொட்டை மாடிக்கு வந்தாள். புவனேஷை கண்டவுடன் ஒரு மகிழ்ச்சி. ஒரு பூரிப்பு.இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா என்று கைகைளை அசைத்துக் கேட்டாள். இவனும் இல்லையென்று சைகை செய்தான். 

பின் தான் வைத்திருந்த நம்பர் கார்டை ஒன்று ஒன்றாக வரிசைப்படி எடுத்துக் காண்பித்தான். முதலில் கவிதாவுக்கு புரியவில்லை. பின் உள்ளே சென்று பேனா பேப்பர் எடுத்து வந்து குறித்துக் கொண்டாள். பின் புவனேஷ் ஒரு விரலை காதின் பக்கமும் மற்றொன்றை வாயின் பக்கமும் வைத்து போன் பேச சொல்லிவிட்டு கிளம்பினான். பக்கத்துக்கு வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களும் இதனைக் கவனித்தனர். புவனேஷ் மனதில் அவர்கள் இருப்பதை மறந்து விட்டோமே என்று தோணல். அவன் அவர்களைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, முகத்தில் தோன்றிய அசட்டுக் களையை துடைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான். 

அலுவலகம் வந்ததுமே தினசரி வேலைகளைக் கவனித்து கொண்டு காலையில் நடந்ததை மறந்தே போனான். சரியாக ஒரு மூன்று மணியிருக்கும். ஒரு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. வேலையின் காரணமாக அதை எடுக்கவில்லை. மீண்டும் சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து அழைப்பு. புவனேஷ் புதிய வடிகையளராக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் போனை எடுத்து பேசினான். 

"ஹலோ.... ஐ ஆம் புவனேஷ், யார் பேசுறது" 

"ஹலோ....." என்று ஒரு பெண் குரல். மிகவும் தயக்கத்துடன், படபடப்பாக... மீண்டும் "ஹலோ....." என்றது அந்த குரல். இப்பொழுது அது கிணற்றுக்குள் இருந்து வருவது போல் கேட்டது. 

புவனேஷ் " நீங்கள் பேசுவது எனக்கு கேட்கிறது? யார் பேசுவது. உங்களுக்கு என்ன வேண்டும்" என்றான். 

"நான்..... நான் தான்... கவி..... கவிதா....."

"சொல்லுங்க கவிதா.... உங்களுக்கு என்ன வேண்டும்." என்று ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவது போல பேசினான். 

"என்னைத் தெரிகிறதா? நான் யார்.... ரென்று" என்றது அந்த பெண்ணின் குரல்.

வேலைப்பளுவின் காரணமாக புவனேஷ் சற்று கோபத்துடன் "நான் வேறு வேலையில் பிசியாக இருக்கிறேன். போனில் எல்லாம் முகம் தெரியாது. அழைத்த விவரத்தைக் கூறுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்"

"நான் வேண்டுமென்றால் பிறகு கூப்பிடட்டுமா...." என்று தயக்கத்துடன் கேட்டது அந்த பெண்ணின் குரல்.

"வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன. என்ன வேண்டும் என்று கூறுங்கள். வியாபாரம் சம்பந்தமாக பேச வேண்டுமென்றால் நான் உங்கள் அழைப்பை என்னுடைய விற்பனைப் பிரிவுக்கு மாற்றி தருகிறேன். அவர்களுடன் பேசுங்கள்" என்று தொடர்பை மாற்ற போனான். 

"இல்லை. கொஞ்சம் பொறுங்கள். நான் தான் கவிதா.... உங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் உள்ளவள்..... அந்த பாட்டிக்கு...." என்று முடிக்கும் முன்பே புவனேஷ் குறுக்கிட்டான். 

"சொல்லுங்க கவிதா..... சாரி.... இன்று கொஞ்சம் பிசியாக இருந்ததால் நான் உங்களுக்கு நம்பர் கொடுத்ததை மறந்து விட்டேன். இதுவரை உங்களுடம் பேசாததால் உங்கள் பெயர் எனக்கு தெரியாது. உங்கள் குரலையும் தெரியவில்லை. சாரி.... என்னுடைய பெயர் புவனேஷ்"

மேலும் தொடர்ந்தான். "நீங்கள் கீழ் வீட்டில் இருக்கும் கனகராஜின் மகளா.... அது உங்கள் பாட்டியா.... என்ன படிச்சுருக்கிறீங்க..." 

"இல்லை... நான் கனகராஜின் மகள் அல்ல.... நான் நர்சிங் படித்து விட்டு இங்கு ஹோம் நர்சாக வேலைக்கு வந்துள்ளேன். பாட்டியை கவனித்துக் கொள்வது தான் என் வேலை"

"பாட்டி கனகராஜின் அம்மாவா..."

"ஆமாம். அவர்களுக்கு 85 வயது ஆகிறது. சுகர், பிரஷர் மற்றும் வயதின் காரணாமாக உள்ள பாதிப்புக்கள் எல்லாம் உள்ளன. நடப்பது, தனியே செல்வது, இருப்பது எல்லாம் கடினம்"

"இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மிகப் பெரிய பொறுமை, சகிப்புத் தன்மை  வேண்டும் அல்லவா."

"ஆமாம்...... வேலைப்பளு குறைவுதான். ஆனால் தனிமை தான் அதிகம். குழந்தைகளோ வீட்டு அம்மாவோ மேலே வர மாட்டார்கள். கனகராஜ் சார் மட்டும் தினமும் ஒருதடவை மாலையில் வருவார். வரும்போது பாட்டி மிகவும் சந்தோசப்படுவார்கள். அவரும் சில நிமிடங்கள் இருந்து விட்டு சென்று விடுவார். நானும் பாட்டியும் மட்டும் தான். பாட்டி ஒய்வு எடுக்கும் பொழுது நான் மொட்டை மாடியில் வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது தான் உங்களைக் கவனித்தேன்." 

"ஆஹா.... ம்...... நல்லது" என்றான் புவனேஷ்.

"நீங்கள் என்னை கவனிக்கவே இல்லை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்பது போல் காலையில் சென்றால் இரவு திரும்புவது என்று இருந்தீர்கள். என்னமோ தெரியவில்லை, உங்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதான்..." என்று இழுத்தாள் கவிதா.

"அதனால் என்ன.... தாரளமாக....."

"சரி மீண்டும் சமயம் கிடைக்கும் போது பேசுகிறேன். பாட்டி அழைக்கிறார்கள்" என்று போனை கட் செய்து விட்டு சென்றாள்.

போனில் பேசிய பிறகு புவனேஷுக்கு கை கால் ஓடவில்லை. நினைவுகள் தேங்கி விட்டன. எதோ பறப்பது போல ஒரு உணர்வு. எத்தனை நேரம் போச்சு என்று தெரியவில்லை. மனது மிகவு லேசாக, உடம்பு ரொம்ப லேசாக. மனது முழுவதும் மகிழ்ச்சியுணர்வு.எதோ கிடைக்காத ஒன்று கை கூடியது போல. தெய்வத்தின் முன் அவன் மட்டும் நிற்பது போன்ற பரவச நிலை. தீடிரென்று கதவு தட்டும் சப்தம். புவனேஷின் கீழ் வலை செய்யும் ஒருவர் "மே ஐ கம்மின்" என்றார்.

"எஸ். ப்ளீஸ்....." என்றான் புவனேஷ்

"சார் எச் ஓ வுக்கு அனுப்புவதற்கு ஒரு ரிபோர்ட் தருவதாக சொன்னீர்கள். ஆனால் இன்னும் வரவில்லை. கொரியர் பாய் வேறு வந்து விட்டான். அதான்...." என்று சொன்னான். 

உடன் புவனேஷ் நினைவு திரும்பியவனாக "ஐந்து நிமிடம்.... இப்பொழுதே தருகிறேன் ... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று விட்டு தன்னுடைய அலுவலக வேளையில் முழுகினான். எப்படி தன்னையே மறந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

பின்னர் வழக்கம் போல காணும் போது சைகைப் பேச்சு தொடர்ந்தது. மூன்று நாட்கள் கழித்து அதே போல் ஒரு உரையாடல். புவனேஷ் அவனைப் பற்றியும் கவிதா அவளைப் பற்றியும் பேச ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றனர். இருவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறினர். எப்பொழுதாவது வெளியில் செல்லும் பொது சந்திக்க நேர்ந்தாலும் ஒரு புன்னகை தவிர வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் பார்த்து தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால்.

இப்படியே சென்று கொண்டிருந்த நட்பு, 6 மாதங்களில் அதன் அடுத்த பரிமாணத்தை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அவளுக்கு இந்த வீட்டினருடன் இருந்த ஒப்பந்த காலம் முடிந்து செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றுதான் நம்பியிருந்தாள். ஆனால் நீட்டிக்கப்படவில்லை.

புவனேஷ் கவிதாவின் நம்பரைப் பார்த்து போனை எடுத்துப் பேசினான். 

"சொல்லு கவிதா..."

"அடுதவாரம் 10 தேதியுடன் என்னுடைய இந்த வீட்டுடனான காண்ட்ராக்ட் முடிகிறது. அவர்கள் நீட்டிக்கவில்லையென்றால் நான் 10 ம் தேதியுடன் செல்ல நேரிடும். என்னுடைய கம்பெனி என்னை மதுரைக்கு வரச் சொல்லுவார்கள். அங்கு சென்று வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கா என்று தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் இந்த ஒப்பந்த காலத்திற்கான பாக்கி சம்பள தொகையையும் பெற்று கொள்ள வேண்டும். பின் வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் ஒய்வு எடுத்து விட்டு வேறு வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்ல வேண்டும்"

எதோ ஒரு சிந்தனையில் "ம்.........." என்றான்.

"என்ன ம்....."

"இல்லை யோசிக்கிறேன்"

"என்ன யோசனை"

இந்த குறுகிய கால நட்பு, என்னுடைய ஒரு கனாக் காலமாக மாறப் போகிறதை நினைக்கும் போது ஒரு வருத்தம். என்னால் மறக்கக முடியாது. ஏன் மீண்டும் இந்த ஊர் தான் வேண்டும் என்று கேட்டு வாய்ப்பு கிடைத்தால் வரமுடியாதா?

"இங்கு கேட்டு வாங்க முடியாது. அவர்கள் தருவதைத்தான் ஏற்று கொள்ள வேண்டும்"

"முயன்றால் முடியாதா?"

"முயன்று பார்க்கலாம்"

"எப்பொழுது மதுரைக்கு"

"10 ம் தேதி இரவு"

"நானும் அலுவலக விசயமாக அன்று இரவு மதுரை செல்ல உள்ளேன். ஒன்றாக செல்லலாமா?"

"ஐயோ.... சந்தோசம்...... நல்லா வாங்க, எனக்கும் ஒரு வழித்துணை."

10 ம் தேதி இருவரும் ஒன்றாக மதுரைக்கு புறப்பட்டோம். இருவருக்கும் அடுத்தடுத்த இருக்கை. நடத்துனர் வந்து டிக்கெட் கொடுக்கும் வரை பிரகாசமாக எறிந்த விளக்கு, அவர் சென்று அவருடைய இருக்கையில் அமர்ந்ததும் அணைக்கப்பட்டது. ஒரு சிறிய விளக்கொளி மட்டும். இந்த இரண்டு ஜோடி கண்களைத் தவிர மற்ற கண்கள் எல்லாம் கனவுலகம் சென்றுவிட்டன. மௌனம். வார்த்தைகள் பேச முடியாததை மௌனம் பேசும். உள்ளங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன. இரவின் அரசி, தன்னுடைய மேனியெங்கும் வைரங்கள் போன்று மின்னும் நட்சத்திரங்களை ஆடையாக அணிந்து வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் நிலவில் பாட்டி உடகார்ந்து கொண்டு வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள். இரவின் அரசியும், நிலவின் பாட்டியும் இந்த இருவரையும் பத்திரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவளுடைய கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு மூடினான். அவள் அவன் மேல் ஆதாரவகச் சாய்ந்து கொண்டாள். இருவரின் கண்களும் உறங்கவில்லை உள்ளங்களும் உறக்கத்திற்கு விடுமுறை அளித்தன.

காலை சரியாக 5.30 மணியளவில் மதுரை வந்து சேர்ந்தார்கள். இருவரும் தேநீர் அருந்திவிட்டு நின்றார்கள். 

அவள் புவனேஷைப் பார்த்து, "எங்கே தங்கப் போகிறீர்கள்"  என்றாள். 

"எப்பொழுதுமே நான் மதுரை வந்தால் கணேஷ் லாட்ஜில் தான் தங்குவேன். என்னுடைய வாடிக்கையாளர்களில் பலர் அதன் அருகில் தான் உள்ளனர்"

"உங்கள் வீட்டில் உங்களது கல்யாண ஏற்பாடுகள் ஏதாவது..." என்று சாதாரணமாகப் பேசுவது போல மெதுவாகக் கேட்டாள்.

"அம்மா அப்பா பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், இன்னும் முடிவாகவில்லை."

"உள்ளூர் பெண்களை மட்டுமா பார்க்கிறார்கள். இல்லை வெளியூர் என்றாலும் பார்க்கிறார்களா?"

"உள்ளூர் வெளியூர் என்று இல்லை. எங்கிருந்தாலும்..... ஆனால் பெண் கொஞ்சம் படித்தவளாக மிகவும் பொறுமைசாலியாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பெண்ணாக எங்களுடைய கட்டுமானத்தில் உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள். இல்லையென்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள்."

புவனேஷ் சொன்னவுடன் அவள் கண்கள் லேசாக நனைந்தன. அதை கவிதா வெளிக்காட்ட விரும்பவில்லை. வேறு பக்கம் திரும்பி அதை மறைத்து, பின் புவனேஷைப் பார்த்து,

"சரி..... நான் கிளம்புகிறேன். அலுவலகம் திறந்திருக்கும். எனக்காக யாரவது காத்துக் கொண்டிருப்பார்கள். அங்கேயே ஒரு கெஸ்ட் ரூம் உள்ளது. அங்கு சென்று ரிப்போர்ட் செய்து விட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு குளித்து ரெடியாகி மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டும்" என்று சொன்னாள்.

உடன் புவனேஷ் "கவி...... உன்னை தொடர்பு கொள்ள வேறு ஏதாவது நம்பர் இருக்கிறதா....."

"எங்கள் கம்பெனி விதிகளின் படி, நாங்கள் தனியாக நம்பர் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. நாங்கள் செல்லும் இடங்களில் உள்ள நம்பர்களையே பயன்படுத்தவேண்டும். அதனால் நானே உங்களை அழைக்கிறேன்" என்றாள்.

"அப்படியென்றால் இதுநாள் வரை நீ என்னை தொடர்பு கொள்ள உபயோகித்த நம்பர் என்னவாயிற்று"

"அது அந்த வீட்டில் பாட்டியை கவனித்துக் கொள்வதற்காக உபயோகபடுத்திய ஒரு நம்பர். வரும் போது அவர்களிடமே கொடுத்து விட்டேன்."

இருவரும் சிறிது நேரம் மௌனமாக நின்று விட்டு பிரிந்து சென்றார்கள். புவனேஷுக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. அவளின் நினைப்பு. விடுதியிலேயே இருந்தான். என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக அன்றைய பொழுது கடந்தது. மீண்டும் இரவின் ராணி வந்தாள். ஒன்றும் புரியாத தனிமையாக அந்த இரவு கடந்தது. அவள் அழைப்பாள் பேசலாம் என்றிருந்த புவனேஷுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். காலையில் அவளுடனான உரையாடல் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலை எல்லா அலுவலக வேலையையும் அவசர அவசரமாக செய்து முடித்து தன்னிடம் திரும்பினான். ஆனால், சிந்தையெல்லாம் கவிதா..... 

ஒரு ஆணுக்கு எப்பொழுதுமே ஒரு பெண் துணை தேவைப்படுகிறது. அம்மா, அக்கா, மனைவி, மகள், சகோதரி, சொந்தக்காரி, தோழி....... ஒரு பெண்ணின் அன்பும் அருகாமையும் இல்லாத நிலையில் தான் பெண்மை உணரப்படுகிறது. இருக்கும்போது நாம் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை.  அதன் மகிமை தெரிவதில்லை.

எதிர்வீட்டை காண நேரும்போதெல்லாம் மனதிற்குள் ஒரு வெறுமை.... தொண்டை அடைக்கும் உணர்வு. எதுவும் இல்லாத வெறுமையில், எது எதை அடைக்கும் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அதை மறப்பதற்காகவே அலுவலகத்தில் முழு மூச்சில் வேலை செய்தான் புவனேஷ். கம்பெனியும் நல்ல நிலைமையில் சென்று கொண்டிருந்தது.

ஒரு வருடம் உருண்டோடியது. ஒரு புது நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதை புவனேஷ் எடுத்தவுடன், அவனைப் பேச அனுமதிக்காமல்.....

"ஹாய் புவனேஷ்....."

"எஸ் புவனேஷ்...... யார் பேசறீங்க....."

"ஹே.... என்னை தெரியல... வாய்ஸ் வச்சு ஐடெண்டிபை பண்ண முடியலையா?"

புவனேஷ் யோசித்துக் கொண்டே. "இல்லை....." என்றான். அவனுக்கு சந்தேகம் இது கவிதாவாக இருக்குமோ என்று.....  ஆனால் அவள் பேசும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் சரியாக கணிக்க முடியவில்லை.

"ஓகே கே.... ரொம்ப முளிக்காதீங்க.... நான்தான் கவிதா. எப்பிடி இருக்கீங்க....."

புவனேஷும், "ஹாய், கவி...... எப்பிடி இருக்க... ரொம்ப நாளாச்சு..... பேச்செல்லாம் மாறிப்போச்சு.... இப்போ எங்க இருக்க? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு பேசணும் போல இருக்கு." என்றான் மிக ஆவலுடன்.

"நான் இப்போ பெங்களுர்ல ஒரு தமிழ் குடும்பத்துல ஒரு தாத்தாவைப் பார்த்துக்க வந்துருக்கேன். இங்கே வந்ததால பேச்சு வழக்கு கொஞ்சம் மாறிடுச்சு.... உங்களை மறக்கணும் நட்பை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக தான் நான் உங்களைத் தொடர்பே கொள்ளவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்"

"நல்லது.... எனக்கும் புரிகிறது..... இதுதான் உன்னுடைய நம்பரா?"

"இல்லை இதுவும் இங்கு எனக்கு தரப்பட்ட நம்பர். நான் நாளை காலை உங்கள் ஊரில் இருப்பேன். அங்கு ஒரு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு திரும்பிவிடுவேன். அன்று நான் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாமா.... அனுமதி கிடைக்குமா" என்றாள்.

"தாராளமாக.... நான் பஸ் ஸ்டான்ட் வந்து பிக்அப் செய்யட்டுமா"

"ஓகே.... அங்கு வந்தவுடன் நான் உங்களை அழைக்கிறேன்..... பை... குட் நைட்" என்று இணைப்பை துண்டித்தாள்.

நட்பு தொடர்கிறது மீண்டும்.

Tuesday, February 8, 2022

உணர்வு

 உணர்வு - 25.௦9.2021


ஊரின் நடுவே ஒரு அழகான கோயில், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேரம் போவதே தெரியவில்லை. நம்மில் பலரும் கோயிலுக்கு செல்கிறோம். ஆனால் ஒருவர் கூட கோயிலை முழுமையாக பார்ப்பது இல்லை.கோயில் என்பது ஒரு வழிபடும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய சின்னம். பண்பாடு நாகரிகம்  மற்றும் நமது கலைகளை வளர்க்கும் ஒரு சமுதாய கூடம். பக்தர்களுக்கு அது ஒரு வழிபாட்டுக் கூடம். நேரடியாக சென்று கருவறை முன் நின்று வழிபடுகின்றனர். அல்லது வரிசையில் சென்று வழிபடுகின்றனர். இன்று அறநிலையத் துறையின் கீழ் பலவேறு கோயில்கள் வருவதால் கோயிலை சுற்றி வர கூட முடிவதில்லை. பரிவார தெய்வங்களை காண கூட அனுமதியில்லை. அவ்வாறு காணவேண்டும் என்றால் நமக்கு ஏதாவது ஒரு அதிகாரியின் துணையோ அல்லது அர்ச்சகரின் துணையோ வேண்டும். இல்லாவிட்டால் எல்லா கோயில்களிலும் ஜருகண்டி.... ஜருகண்டி.... தான். கருவறை வழிபாட்டுக் பின்னர், கோயிலை மூன்று சுற்று சுற்றி விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுகின்றனர். சிவன் கோயில் என்றால் சண்டிகேஸ்வருக்கு ஒரு சொடுக்கு அல்லது கை தட்டல் மற்றும் எழுந்து வரும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து வருவர். ஆனால் அங்கு பலவிதமான சிற்பங்கள் உள்ளன, சித்திரங்கள் உள்ளன, அதில் எத்தனை விதமான கதைகள், கற்பனைகள், காவியங்கள். இவை எதையுமே நாம் ரசிப்பதில்லை, மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இங்கு உள்ள ஒவ்வொன்றின் பின்னனியிலும் ஒரு கதை உண்டு, காவியம் உண்டு... மற்றும் காமம், காதல், வீரம், பண்பாடு, சிற்பியின் கை வண்ணம், சிந்தனை அப்பப்பா....

நான்  சென்ற கோயில் பழைமையான நாக வழிபாடு உள்ள ஒரு கோயில். கோயில் திருவிழா என்று நினைக்கிறேன். நல்ல கூட்டம். மக்கள் முகங்களில் எல்லாம் மகிழ்ச்சி. ஊரே உறவினர் மற்றும் விருந்தாளிகள், பகதர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பிரசங்கி ஒருவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தெய்வத்தின் பெருமை பற்றியும், வழிபடும் முறைகள் பற்றியும். என்னை பொறுத்தவரை தெய்வ வழிபாடு என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம். மேலும் அது நமக்கு ஒரு மன அமைதியையும், உறுதியையும் தர வேண்டும். பற்றி கொள்வது தானே பக்தி. அல்லாமல் முறைகள் மற்றும் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. இன்று தெய்வங்கள் மதங்கள் என்ற பெயரில் நிறுவனப் படுத்தப்பட்டு உள்ளது. நிறுவனப் படுத்தும் போது கட்டாயம் முறைகள் மற்றும் சடங்குகள் தவிர்க்க முடியாதவை. சிறிது நேரம் நின்று பிரசங்கம் கேட்டு விட்டு கோயிலுக்குள் சென்றேன். பக்தர்கள் கூட்டம் ஜெ... ஜெ... என்றிருந்தது. நடந்து வந்த களைப்பு வேறு. தெய்வத்தைப் பார்க்கும் துடிப்பு வேறு. திடீரென்று பார்த்தால் நான் கர்ப்பகிரகத்தின் முன் நிற்கிறேன் அடியார்கள் கூட்டம் என்னைத் தள்ளி முன் வரிசையில் நிற்க வைத்து விட்டது. தீபத்தின் ஒளியில் தெய்வத்தைக்  கண்ட பொழுது, ஒரு அமைதி. ஒரு வெறுமை. மனதில் ஒன்றுமே கேட்க தோன்றவில்லை. அவனுக்கு தெரியாதா எனக்கு என்ன வேண்டும் என்று. நான் மட்டும் அங்கு நிற்பது போல் ஒரு அமைதி. அவ்வளவு ஒரு அமைதி. எல்லாம் அவன் செயல். பிரசாதம் வாங்கிக் கொண்டு, பிரகாரம் வந்து வாயிலின் வெளியில் வந்தேன். இன்னும் பிரசங்கம் முடியவில்லை. சிறிது நேரம் நின்று கேட்டேன். 

பிரசங்கம் முடிந்தவுடன் பேசியவர், நாளை ஒரு யாகம் இருப்பதாகவும், அந்த யாகம் முடிந்தவுடன் நாகர் தோன்றி ஆசியருளுவார் என்று கூறினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நாகர் தோன்றி ஆசி அருளுவது ஒரு புதுச் செய்தியாக இருந்தது. அதனால் நாளை வருவது என்று முடிவு செய்து கிளம்பினேன். யாரவது சாமியடுவார்கள் என்று நினைத்துச் சென்றேன்.

காலையில் எழுந்து நீராடி விட்டு, தெய்வத்தை மனதில் தொழுது விட்டு கோயிலுக்கு சென்றேன். காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் பசித்தது. கோயிலின் அருகிலேயே ஒரு ஹோட்டல் இருந்தது. சென்று சூடாக நான்கு இட்லியும், ஒரு பில்டர் காப்பியும் குடித்தேன். எனக்கு இந்த ஊர் புதிது தான். நான் நண்பன் ஒருவனைக் காண நீண்ட தூரம் சென்று கொண்டிருந்தேன். வழியில் பயணக் களைப்பு நீங்க கொஞ்சம் தங்கிச் செல்லலாம் என்று இங்கு வண்டியை நிறுத்தினேன். காணும் போதே கிராமத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய புதிய மனிதர்களையும், அவர்களின் செயல், பேச்சு மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் காணும் போது நமக்கு ஒரு புத்துணர்வும் புதிய அனுபவமும் கிடைக்கிறது. நான் என்ற பிம்பம் மாறி நாம் என்ற பிம்பம் கிடைக்கிறது. 

ஊர்த் திருவிழா என்பதால் அனைவரும் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் பல செய்து, பலருடன் அதைப் பகிர்ந்து ஒரே கோலாகலமாக இருந்தது. இதைப் பார்க்கும் பொழுது, எனக்கு எனது சிறுவயது நினைவலையும், எனது பாட்டியுடன் எங்கள் ஊர் சித்திரை திருவிழாவும் கலந்து கொண்டு கொண்டாடிய தினத்தையும் நினைவு வருகிறது. மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா? மனதில் ஒரு ஏக்கம். 

கோயிலுக்கு சென்றேன், யாகம் நடந்து கொண்டிருந்தது. மந்திர ஒலியைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு. வேறு விதமான பேச்சுக்கள் இல்லை. யாகத்தின் நடுவே ஒரு வித்தியாசமான உருவில் ஒரு மிகச் சிறிய உருவம் ஓன்று வெளியே வந்தது போல் எனக்கு தோன்றியது. அது ஒரு நீண்ட வாலுடனும் தலைப்பகுதி ஒரு சிறிய கடற்குதிரையின் உருவத்துடன் தோற்றம் அளித்தது. அது என்னை நோக்கி வந்ததை உணர்ந்தேன். மனதில் ஒரு சிறிய பயம். தொண்டைக்குளிக்குள் ஒரு பந்து மேலேயும் கீழேயும் செல்லாமல் தவிப்பதை என்னால் உணர முடிந்தது. யாகம் நடக்கும் இடத்திலிருந்து ஒரு சப்தம். "உடனே அதனைப் பிடிக்க வேண்டும். அதை குளிர்வித்து சாந்திப் படுத்த வேண்டும்" என்று யாரோ ஒருவர் கத்தினது எனது காதுகளில் விழுந்தது. நான் அதைப் பிடிக்க முயன்ற பொழுது அது என் கையில் இருந்து வழுவிக் கொண்டு சென்றது. கையில் எதோ ஒரு வழுவழுப்பை  உணர்ந்தேன். மீண்டும் அதை பிடிக்க முயன்றேன். அப்பொழுது அது என் கையில் மாட்டிக் கொண்டு விஸ்வரூபம் எடுத்தது. என்னால் நம்பவே இயலவில்லை. சிறிதாக இருந்த ஒரு உருவம் இப்பொழுது பல மடங்கு பெரிதாகி படமெடுத்து நின்றது. கழுத்தில் ஒரு நீல நிறம் தெரிந்தது. கண்கள் கூசின. நீண்ட நேரம் அதை காண இயலவில்லை. என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தேன். என்னைப் போல் எல்லாவருக்கும் ஒரு ஆச்சர்யம் அதிசயம். 

நிமிர்ந்து பார்க்கும் பொழுது அந்த உருவம் விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடுவது போல் இருந்தது. என்னவொரு  அழகு, என்னவொரு ஆனந்தம். அதன் தலை காற்றாடி போல ஆடிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய ஒரு குடையின் கீழே நாங்கள் இருப்பதைப் போல் உணர்ந்தேன். கோயில் மணி அடிப்பது போல் ஒரு உணர்வு. 

டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... 

"இந்த அலாரம் வைச்சு பெட் காபி குடிக்கிற பழக்கத்தை என்னைக்குதான் விடுவீங்களோ? என்னங்க..... மணி 6 ஆச்சு. பெட் காபி வச்சுருக்கேன்.... ஆற்றதுக்குள்ள எந்திருச்சு குடிங்க..." என்று என் மனைவியின் குரல் கேட்டு எழுந்தேன்.

Thursday, July 8, 2021

சிறுகதை - கண்ணன் வருவான்

நானும் சுப்புவும் பால்யகால நண்பர்கள். ஒன்றாகவே படித்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். ஒன்றாகவே அலுவலகம் வந்து விட்டு ஒன்றாகவே திரும்பியும் செல்வோம்.

 

இன்று நான் சுப்பு வருவதற்காகத் தெருமுனையில் நின்று காத்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதும் வரும் நேரம் தவறியும் சுப்பு வரவில்லை. யதேச்சையாக நேற்று வரும் வழியில் இருவரும் பேசிக்கொண்டு வந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. இன்று சுப்புவின் பெண்ணைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதனால் அவன் விடுமுறை. நான் பின் காத்திராமல் அலுவலகத்திற்கு சென்றேன்.

மறுநாள் நான் அதே இடத்தில் காத்துக்கொண்டிருந்தேன். இன்றும் மிக நேரமாகியும் வரவில்லை. நானும் வழக்கம் போல அலுவலகம் வந்து விட்டேன். ஆனால் சுப்புவைக் காண முடியவில்லை. பியுனைக் கூப்பிட்டுக் கேட்ட பொழுது இன்னும் வரவில்லை என்று கூறினான். எனக்கோ வேலையே ஓடவில்லை. கொஞ்ச நேரத்தில் 11 மணியளவில், சுப்பு அலுவலகத்துக்குள்ளே நுழைந்தான். அவன் முகமே சரியில்லை, மிகவும் சோர்வாகக் காணப்பட்டான்.

 

நான் அவனிடம் சென்று "என்ன ஆயிற்று?.... எல்லோரும் நலம் தானே?" என்றேன்.

 

ஆனால் யாருக்கோ பதில் சொல்வது போல "ம்...... ம்..... நலம்தான்" என்றான்.

 

நான் மிகவும் யோசனையுடன் என் மேசைக்குத் திரும்பினேன். பின்னர் அலுவலக வேலைகளில் முழ்கிய காரணத்தினால் சுப்புவிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

 

மாலையில் அலுவலகம் முடிந்தபிறகு வீட்டுக்குச் செல்வோமா என்று கேட்க சுப்புவின் இருக்கையைக் கவனித்த போது அது காலியாக இருந்தது. பியூனிடம் விசாரித்தபொழுது மாலை நான்கு மணிக்கே கிளம்பிவிட்டதாகவும், தலைவலி என்று கூறி பெர்மிசன் வாங்கியதாகவும் கூறினார். இதெல்லாம் எனக்கு மிகவும் புதிராக இருந்தது. நேரே சென்று கேட்டுவிடலாம் என்று சுப்பிவின் இல்லம் நோக்கி விரைந்தேன்.

 

ஆனால் சுப்புவின் வீடு பூட்டி இருந்தது. அடுத்த வீட்டில் இருந்த பெண்மணியிடம் விசாரித்தேன்... அம்மாவும் பிள்ளையும் கோயிலுக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். யோசைனையுடன் காத்திருந்தேன். தூரத்தில் கோகிலாவும் மாதவியும் வந்து கொண்டிருந்தார்கள். என் மனம் பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்திருந்தன. நானும் சுப்புவும் கோகிலாவைப் பெண் பார்க்கச் சென்றதும், கோகிலா சுப்பு எதிர்பார்த்தது போல ஒரு அழகிய, நன்கு பாடத்தெரிந்த, +2 வரை படித்த பெண்ணாகத் தெரிந்தாள். சுப்புவும் ஒன்றும் குறைந்தவனில்லை. கமலகாசனைப் போல நீண்ட காலர் வைத்த சட்டையைப் போட்டுக் கொண்டு தன்னுடைய சுருட்டை முடியை வைத்துக் காது வரை மூடிக்கொண்டு கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு கதாநாயகனைப் போன்று வந்திருந்தான்.

 

பெண் பார்க்கச் சென்ற பொழுது, கம்பனின் இராமாயணம் போலக், கண்கள் மட்டுமே பேசிக் கொண்டன. மனமும் மனமும் ஒன்றான பின்பு திருமணம் தானே.....


"வாங்க அண்ணே...." என்று கோகிலா என்னை வரவேற்றாள். நானும் நினைவு திரும்பியவனாக "ஆமாம்.... ஆமாம்..... எப்படியம்மா நன்றாக இருக்கிறாயா" என்று கேட்டேன். அவளும் ஒரு மாதிரி பதில் சொல்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். நானும் பின்னாலேயே சென்றேன்.

 

மாதவியைப் பார்த்துக் கேட்டேன், "என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?.... இப்பொழுது தான் சென்று கொண்டிருக்கும் வேலை எப்படி உள்ளது. படித்ததற்கு ஏற்ற வேலை தானே?" என்றேன்.

 

"ஆமா.... அங்கிள்" எப்பொழுதும் கல கலவென்று பேசும் பெண் இப்பொழுது இவ்வாறு சொல்லிக்கொண்டே தன்னுடைய ரூமுக்குள் சென்று விட்டாள்.

 

நான் மீண்டும் கோகிலாவைப் பார்த்து, "இன்னும் சுப்பு வரவில்லையா?" என்று கேட்டேன்.

"எப்பொழுதும் உங்களுடன் தானே வருவார். இது வரும் நேரம் தான். ஏன் நேற்று லீவ் எடுத்ததனால் வேலையை முடித்து விட்டு வருகிறாரா?" என்று பதில் கேள்வி கேட்டாள்.

நான் இப்போழுது யோசிக்க ஆரம்பித்தேன். எதோ நிலைமை சரியில்லை என்று தெரிந்தது. நான் அவளிடம் சுப்பு வந்தால் நான் வந்ததாக சொல்லி விடம்மா என்று சொல்லிவிட்டு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்கு எதோ மனம் சரியில்லை. வீட்டுக்கு வந்து சேர்ந்தவுடன் ஏதேதோ யோசித்துக்கொண்டு உறங்கி விட்டேன். காலையில்  இராஜம் தான் வந்து எழுப்பினாள். "இரவு சாப்பிடாமல் தூங்கி விட்டீர்கள் போல.... எல்லாம் வைத்தது வைத்தது போல உள்ளது." என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. எப்பொழுதும் போலக் குளித்து ரெடியாகி, காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு அலுவலகம் கிளம்பினேன்.

எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்கும் இடத்தில் சுப்பு நின்று கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து இருவரும் ஒன்றாக அலுவலகம் வந்தோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நாங்கள் இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் வந்து சேர்ந்தோம். வருகைப் பதிவேட்டில் கையெழுத்தைப் போட்டுவிட்டு "கான்டீன் சென்று வருவோமா?" என்று கேட்டேன். சரியென்று தலையாட்டினர்.

 

இரண்டு கப் டீ வாங்கிக் கொண்டு ஒரு மூலையில் சென்று அமர்ந்தோம். நான் எதுவுமே பேசவில்லை. அமைதியாகச் சன்னல் வழியே பார்த்துக் கொண்டு டீ குடித்துக்கொண்டிருந்தேன். சுப்பு தேநீர் கோப்பையைப் பார்த்துக்கொண்டே நான் ஏதாவது கேட்பேனா என்று யோசித்துக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். கனத்த மௌனம்..... நானே கலைத்தேன்..... "தேநீர் நன்றாக இல்லையா" என்றேன்.....

 

"அதெல்லாம் ஒன்றும் இல்லை"

 

"பின் என்ன? தேநீர் ஆடை வரும்வரை காத்துக்கொண்டிருக்காமல் குடிக்கலாமே" என்றேன்.....

கேட்டதுதான் தாமதம்..... சுப்புவோ, "இப்பொழுது நடந்து கொண்டிருப்பதை நினைத்தால் என் முகத்தை எந்த ஆடை கொண்டு மறைப்பது?" என்று கேட்டார். நான் அவனின் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டேன். "எதோ பிரச்சினை என்று நான் யூகித்தேன்.... என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்" என்றேன்....

"உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல போகிறேன்" என்றான்.

 

"பெண் பார்த்தது என்ன ஆயிற்று, எல்லாம் சுபம் தானே"

 

"அந்த ஒரு நிகழ்வு நடக்கவேயில்லை.... நானே மாப்பிள்ளை வீட்டாரை கூப்பிட்டுப் பெண் மேலும் படிக்க வேண்டும் என்கிறாள். அட்மிசனும் கிடைத்து விட்டது. அதனால் படிப்பு முடிந்த பிறகு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்றேன். அதற்கு அவர்கள், தாங்களே படிக்க வைப்பதாகக் கூறினார்கள். நான் வேண்டாம், எல்லாம் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்றேன்"

"ஏன் .... பெண் படிக்க வேண்டும் என்று சொல்கிறாளா?"

 

அதற்கு சுப்பு கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

"அவள் ஏற்கனவே படித்த படத்திற்காக நான் சொன்ன பொய்" என்று சொன்னான்.....

"புரியவில்லை " என்றேன்

 

"பணிபுரியும் இடத்தில் இவளுடன் வலை செய்யும் ஒருவருடன் பழக்கமாம். பழக்கத்தினால் இப்பொழுது இவள் இரண்டு மாதம்....பெண் பார்ப்பதற்கு முன்பு அவன் என்னிடம் வந்து பெண் கேட்பதாக பேசி வைத்துள்ளனர். வேலை விஷயமா மும்பை சென்றவன் அங்கு ஒரு விபத்தில் பெண் பார்க்கும் வைபவத்திற்கு முதல் நாள் காலை இறந்துவிட்டான். இது தெரிந்து இவள் எங்களிடம் விசயத்தைச் சொல்ல நாங்கள் அதிர்ந்தோம். மேலும் அவளிடம் பேசி நிலைமையை சொல்லிச் சரி செய்து கல்யாணம் செய்து விடலாம் என்றால் கர்பவதி....என்ன செய்வது என்றே தெரியவில்லை. கலைத்து விடலாம் என்றால் மனது உடன்பட மறுக்கிறது. உயிர் வந்த பிறகு கலைப்பது குற்றமில்லையா..... நம் உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்றால் அதுவும் பாவம். என்ன செய்வது என்றே தெரியவில்லை" என்றான்

 

எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மேலும் சுப்பு சொன்னான்.... "சங்கரா.... உனக்கு தெரியுமில்லையா.... இது வெளியில் தெரிந்தால், என் சமூகத்தில் எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் என்று...."

நான் மெதுவாக "சுப்பு... சற்றுப் பொறுமையாக இரு.... யோசிப்போம்" என்றேன். ஆனாலும் சுப்பு கலங்கிக் கொண்டிருந்தான்.... எனக்கு வேலையே ஓடலை... மனதெல்லாம் மாதவி பற்றிய நினைப்புத்தான். கெட்டிக்கார பிள்ளையாயிற்றே. எப்படி ஏமாந்தாள். வீட்டு நிலைமை அறிந்த பெண். எப்படி என்றே தெரியவில்லை. கடைசியாக எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதுதான் சரியென்று முடிவெடுத்தேன்.

 

போனவாரம் என்னை மதுரை அலுவலக பொறுப்பெடுத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள். போக விருப்பமில்லாத காரணத்தினால், முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் கேட்டேன். இப்பொழுது நேரே பொது மேலாளர் அறைக்கு சென்று, மதுரை செல்ல சம்மதம் தெரிவித்தேன். நேராக சுப்புவிடம் வந்தேன். அவன் என்னை நிலையில்லாத மனதுடன் உற்று நோக்கினான்.

"என்னை மதுரைக்கு மாற்றியிருக்கிறார்கள். இரண்டு நாட்களில் செல்லவேண்டும். நானும் என் மனைவியும் மட்டுமே என்பதால் உடனே சரியென்று சொல்லிவிட்டேன். உனக்குச் சம்மதமும் சந்தோசமும் தானே" என்றேன்.

அவன் மேலும் அமைதியை இழந்து "இதில் எனக்கு என்ன சந்தோசம்.... நீயும் இல்லையென்றால் நான் என்ன செய்வேன்..." என்று கலங்கினான்

 

"கலங்காதே.... எல்லாம் நம் நன்மைக்கே..."  என்றேன்

 

"இதில் என்ன நன்மை"

"எல்லாம் மாலையில் சொல்கிறேன். நாம் வழக்கமாக வெள்ளிகிழமைகளில் சந்திக்கும் பூங்காவிற்கு வந்துவிடு.... பேசிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். மதுரை செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் அல்லவா....

 

மாலையில் பூங்காவிற்கு சென்றேன். சுப்பு மட்டும் ஒரு பெஞ்சில் தனியாக அமர்ந்திருந்தான். நான் அவனுடன் சென்று அமர்ந்தேன். சுப்பு எதுவும் பெசவில்லை... நானே தொடர்ந்தேன்.

 

"சுப்பு இப்பொழுது உன் பெண் படிக்கப் போகிறாள் என்று தானே சொல்லியிருக்கிறாய்.... அது அப்படியே இருக்கட்டும். நான் இன்னும் இரு தினங்களில் மதுரை செல்கிறேன். மாதவியை நீ என் வீட்டிற்கு அனுப்பி வை. எல்லோரிடமும் அவள் மேல் படிப்பிற்காக வெளியூர் செல்வதாகக் கூறிவிடு. நானும் எனது மனைவியும் உன் பிள்ளையை எங்கள் பிள்ளை போல் பார்த்துக்கொள்கிறோம். பிரசவம் எல்லாம் முடிந்த பிறகு அவளை நான் கொண்டு வந்து உங்களிடம் சேர்க்கிறேன். அதுவரை இந்த விஷயம் நம் இரு குடும்பங்களுக்குள் இருக்கட்டும்... மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

 

"மேலும் , எல்லாம் ஆண்டவன் விட்ட வழி" என்றேன்

சுப்புவும் ஒரு மனதாகச் சம்மதித்தான். மாதவியை அன்று இரவே எங்கள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டான். என் மனைவியிடம் நான் இதுபற்றி முன்பே சொல்லியிருந்த காரணத்தால் அவள் எதுவும் இதுபற்றி மாதவியிடம் கேட்காமல் எப்பொழுதும் போலப் பேசினாள்.

 

ஆனால் மாதவியோ, நாங்கள் எதுவும் கேட்காமல் பொதுவான விஷயங்களைப்பற்றி மட்டுமே பேசுவதைப் பார்த்துத் திகைத்துப் போனாள். கண்களில் கண்ணீர் முட்டியது. அதைப் பார்த்த எனது மனைவி இராஜம் "கண்ணா.... ஏன் அழுகிறாய்.... உன்னைப்பற்றி எங்களுக்குத் தெரியும். நீ எங்கள் வீட்டுப் பிள்ளை.... எதோ கெட்ட நேரம் எல்லாம் நடந்துவிட்டது. இப்பொழுது வருத்தப்பட்டு ஒன்றும் ஆகப்போவது இல்லை. இனிமேல் நாம் நடப்பதைக் கவனிப்போம்" என்று ஆறுதல் கூறினாள்.

 

மதுரை செல்ல வேண்டிய நாளும் வந்தது. நாங்கள் மூவரும் மதுரை சென்று சேர்ந்தோம். தங்குவதற்கான வசதிகளை கம்பனி செய்து தந்திருந்ததால் வேலை மிச்சம். முதல் நாள் சென்றுப் பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். முதல் நாள் என்பதால் வேலை ஒன்றும் பெரிதாக இல்லை. எல்லாம் அறிமுக கூட்டங்களாகவும், முந்தய நடப்புக்களை விவரிப்பதுவுமாகச் சென்றது.

 

மாலை வீடு சென்றதும் மாதவியை அழைத்து இங்கு ஒரு பெரிய பல்கலைகழகம் உள்ளது என்றும் ஏதாவது ஒரு மேல் படிப்பில் சேருமாறும் கூறினேன். அவள் ஏன் எதற்காக என்றாள்....

 

"இப்படி ஒரு காரணத்தைச் சொல்லித்தான் ஊரிலிருந்து இங்கு வந்தாய்....  நாளை யாராவது ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வேண்டும் அல்லவா..." என்றேன். அவளும் நிலைமையைப் புரிந்துகொண்டு "சரி...." என்றாள்.

 

இப்பொழுது அவளுக்கு மூன்றாம் மாதம். இராஜத்தை அழைத்து, மாதவியை நாளை மருத்துவரிடம் கூட்டிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.

 

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாட்கள் ஓடின. இடையிடையே சுப்பு அழைத்து எல்லாம் கேட்டுக்கொள்வான். இருந்தாலும் அழாத குறைதான். பிரசவ நாளும் வந்தது. நான் இதைச் சுப்புவிடம் சொல்லவில்லை. தெரிந்தால் மனம் இருப்புக் கொள்ளாமல் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதைபதைப்புத்தான். மருத்துவமனையில் சேர்த்தாகி விட்டது. காலையில் சரியாக 5.45 மணியளவில் அழகிய ஆண் குழைந்தையை மாதவி பிரசவித்தாள். எனக்கும் இராஜத்திற்கும் மனது இருப்புக் கொள்ளவில்லை. மனதின் ஒரு மூலையில் தனக்கு இப்பிடி ஒரு பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற கவலையை மீறின ஒரு சந்தோசம்.

 

நான் சுப்புவை அழைத்துத் தகவல் தெரியப்படுத்தினேன். ஆனால் சுப்புவிற்கோ மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. நான் இப்பொழுது வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவன் வரவில்லை. நாங்கள் மாதவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்க்குச் சென்றோம். இராஜம் தான் ஆரத்தி கரைத்து உள்ளே அழைத்துச் சென்றாள். நாங்கள் குழந்தைக்கு கண்ணன் என்று பெயர் வைத்தோம். மாதவிக்குக் குழந்தை பிறந்த உடம்பு என்பதால் இன்னும் வயிறு உள் செல்லவில்லை. கடவுளின் அனுக்கிரகத்தால் சுகப்பிரசவம் என்பதே ஒரு வரமாக கிடைத்தது.

 

இராஜம் ஒரு துண்டை மாதவியின் இடுப்பில் கட்டி வயிறு உள்செல்ல உதவி செய்து வந்தாள். மாதவியும் விரைவிலேயே பழைய பெண்ணாக மாறினாள். ஆனால் இப்போது உள்ள பிரச்சினையே, குழந்தையை விட்டுத் தாயைப் பிரிப்பது எப்படி என்பதுதான். நாங்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தோம். ஆனால் எங்களால் இயலவில்லை. மாதவியின் வீட்டிலோ உற்றார் உறவினர் விசாரிப்பு வேறு..... மாதவி எங்கே.... எப்பொழுது படிப்பு முடியும்... ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை என்று......

சுப்புவிற்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. என்னிடம் கூடத் தகவல் தெரிவிக்காமல் மதுரைக்குக் கிளம்பி வந்து விட்டான். காலையில் பேப்பர் எடுபதற்குக் கதவைத் திறந்தால் சுப்பு ஆட்டோவில் வந்து இறங்கிக்கொண்டிருந்தான். எனக்கு ஒரே ஆச்சர்யம். "என்ன சுப்பு.... இங்கே.... " என்றேன்.....

 

"என்னால் ஊரில் இருக்க முடியவில்லை... எல்லாம் ஒரே பேச்சு. பதில் சொல்ல முடியவில்லை. அதுதான் மகளைப் பார்க்கச் செல்வதாகக் கூறி இங்கு வந்துவிட்டேன்"

 

நானும் அப்படியா.... சரி வா..... என்று கூறி உள்ளே அழைத்துச்சென்றேன். இராஜமும் டீ போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். சுப்புவிற்கு எப்படி கேட்பது என்று தெரியவில்லை. நெளிந்தார். பின் ஒரு வழியாகக் கேட்டே விட்டார். மகளும் குழந்தையும் எங்கே என்று. இராஜம் தான் பதில் சொன்னாள், குழந்தைக்குப் பால் கொடுப்பதாக..... சுப்பு அமைதியாக டீ குடித்தார்.

 

மாதவி குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு ஹாலுக்கு வந்த போது, அப்பாவைப் பார்த்தாள். கன்று தாயைப் பார்த்தது போல் வந்து கட்டிக்கொண்டு அழுதாள். இருவரும் ஒருவாறு சமாதானம் ஆனார்கள். சுப்புதான் கேட்டார், "குழந்தை எங்கேயம்மா? எப்படி இருக்கிறான்" என்று..... "நன்றாக இருக்கிறான் அப்பா" என்று சொன்னாள்.

 

சுப்பு வேறு எதுவும் பேசி வார்த்தையை வளர்க்காமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்தார். "எப்பொழுதம்மா ஊருக்குச் செல்வது? அங்கு எல்லோரும் உன்னைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட்டார்கள். நாங்கள் நீ மேல் படிப்பிற்காக மதுரை சென்றுள்ளதாகவும் லீவ் கிடைக்காதக் காரணத்தினால் வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளோம்" என்றார்.

 

மதவிக்கோ என்ன சொல்வது என்றே தெரியவில்லை. "இல்லையப்பா, குழந்தையை விட்டு விட்டு நான் எப்படி வருவது என்று தெரியவில்லை" என்றாள். நானோ இராஜமோ எதுவும் பேசவில்லை. பேசாமல் இருவர் பேசுவதையும் கவனித்துக்கொண்டு இருந்தோம். சுப்புவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

 

மாதவியே தொடர்ந்தாள். "அப்பா எனக்கு இந்தக் குழந்தையே போதும். நான் பேசாமல் குழந்தையைப் பார்த்துக்கொண்டு இப்படியே இருந்துவிடுகிறேன். யாருக்கும் என்னுடைய பழைய கதை தெரியாமல் இன்னொரு பந்தத்தைத் தொடர என் மனம் மறுக்கிறது. என்னமோ என் வாழ்க்கை இப்படி ஆகி விட்டது. போனது போகட்டும்.... நான் என் குழந்தையுடன் இப்படியே இருந்து விடுகிறேன்" என்றாள்.

 

நான் சுப்புவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தேன். சுப்பு மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டான். நான் அவனிடம் "ஏதாவது சமாதனப்படுத்தி மாதவியை அழைத்துக்கொண்டு செல். குழைந்தையை எங்கள் குழந்தையாகப் பாவித்துப் பார்த்துக்கொள்கிறோம். இப்பொழுது திருமணப் பேச்சுவார்த்தை எதுவும் எடுக்க வேண்டாம். முதலில் அழைத்துச் செல். காலம் ஒரு நாள் பதில் சொல்லும். பின்னர் பேசிக்கொள்ளலாம்" என்றேன்

 

அவனும் புரியாத புதிராக என்னைப் பார்த்தான். நான் மீண்டும் உள்ளே சென்று மாதவியின் அறைக்குள் சென்றேன்.

 

"மாதவி...."

 

மிகுந்த மன உளைச்சலுடன் கண்ணீருடன் என்னைப் பார்த்தாள்.

 

"பெண் என்பது ஒரு பயிர் போல.... தொடர்ந்து ஒரே இடத்தில் இருக்க முடியாது. நாத்தைப் பிடுங்கி நடுவது போல வேறோரிடம் செல்ல வேண்டியவள். மகள் என்றாலே இன்னொரு வீட்டிற்க்கு மறு மகளாகச் செல்ல வேண்டியவள். வாழை போல குலம் தழைக்கச் செய்ய வேண்டியவள். ஒரு வீட்டின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பெண்ணைப் பொறுத்தே உள்ளது. பெண்ணின் பெருமையே குடும்ப பெருமை. எனவே நீ இப்பொழுது உன் தந்தையுடன் செல். குழந்தையை எங்கள் குழந்தையாக வளர்க்கிறோம். இதனால் தான் என்னவோ இதுவரை எங்களுக்கு ஒரு மகவு கிடைக்கவில்லை. நான் உன் தந்தையுடன் பேசுகிறேன். அவர் உனக்கு வரன் ஒன்றும் இப்பொழுது பார்க்க மாட்டார். நீ எப்பொழுதும் போல அவருக்கு ஒரு மகளாக வீட்டில் இரு. வேலைக்குச் செல். மற்றவற்றைப் வரும் போது பார்க்கலாம்"

 

அவள் அதற்கு ஒரே முடிவாக "என்னால் முடியாது" என்றாள். மேலும் "பால்குடி மறக்காதக் குழந்தையை விட்டு செல்வது மிகப் பெரிய பாவம். அந்தக் குழந்தை என்ன தவறு செய்தது? செய்தது நான் தானே?"

 

நான் "எல்லாம் சரிதான்...இவ்வளவு சங்கடங்களை அனுபவிப்பதற்கு உன்னுடைய தந்தையும் தாயும் என்ன தவறு செய்தார்கள்" என்றேன்

 

அவளால் பதிலேதும் கூற முடியவில்லை. என்னையே பார்த்தாள். எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி. தாயையும் பிள்ளையையும் பிரிப்பதா அல்லது தந்தையும் மகளையும் பிரிப்பதா? ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் இதில் எனக்கு உதவக் கூடாதா... என்று மனதிற்குள்ளேயேப் பிரார்த்தித்தேன்.

 

மீண்டும் மாதவியைப் பார்த்து "கவலைபடதேம்மா.... உனக்கும் உன் குழந்தைக்கும் நான் இருக்கிறேன்..... ஆனால் இப்பொழுது உன் கருணை தேவைப்படுவது உன் தாய் தந்தையருக்கே" என்றேன்.

 

மிக நீளமாக ஒரு மூச்சை உள்ளே எடுத்து விட்டு என்னையே பார்த்தாள். நான் "நன்றாக யோசித்து ஒரு முடிவெடு " என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன். 

 

அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலை 5.30 மணியளவில் வீடு வந்தேன். இராஜம் ஹாலில் இருந்தாள். என்ன ஆயிற்று என்றேன். மதியம் முதல் மாலை வரை இருவரும் பேசிக்கொண்டு இருந்ததாகவும் மாதவி ஊருக்கு செல்லச் சம்மதித்தாகவும் வருத்ததுடன் சொன்னாள். நான் எல்லாம் அவன் செயல் என்று மேலே பார்த்தேன். ஒன்றும் சொல்ல வில்லை.

 

டாக்ஸி ஓன்று வரச் சொல்லி வழியனுப்பி வைத்துவிட்டு வரலாம் என்று நினைத்த போது, மாதவி ஒரு பையுடன் வந்தாள். குழந்தைக்கு என்ன என்ன வேண்டும், எப்பொழுதெல்லாம் பால் குடிப்பான், அழுதால் என்ன செய்ய வேண்டும், என்னென்ன மருந்துகள் உள்ளன என்று இராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள். நான் அமைதியாக இருந்தேன். ஒன்றும் சொல்ல வில்லை. மீண்டும் அறைக்குள் சென்று மேலும் ஒரு பெரிய பையுடன் வந்தாள். இப்பொழுது "அப்பா" என்று என்னை அழைத்தாள். நான் அவளையேப் பார்த்தேன்.

 

"குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறான். நான் எனது அப்பாவுடன் செல்கிறேன் அப்பா..... ஆனால் ஒரு நாள் நான் வருவேன் அப்பா.... அவனுடைய அம்மாவாக......"

 

நான் எதுவும் பேசவில்லை. அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

"இப்பொழுதுதான் புரிந்தது என்னுடையக் குழந்தையின் பெயரின் அர்த்தம்..... கண்ணன்"

 

"நீங்கள் எங்களை வழியனுப்ப வரவேண்டாம். நாங்களே செல்கிறோம். என்னை உங்களுடைய மகளாகப் பாவித்து எனக்கு செய்து கொண்டிருக்கும் உதவிக்கு நன்றி" என்றாள்.

 

நானும் இராஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எங்கள் மகளை வழியனுப்பி வைத்தோம்.

 

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...