Friday, March 25, 2022

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1

 சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 1


பெண் விடுதலை வேண்டும். சாதி வெறி தணிய வேண்டும். மத அரசியல் வேண்டாம். ஆனால் இவை எல்லாம் இப்பொழுது அதிகமாகத்தான் உள்ளது. இலக்கியம் என்ற சொல்லே நன்றாக உள்ளது. ஆனால் இப்பொழுது நாம் இந்து இலக்கியம், தலித் இலக்கியம், கிறித்துவ எழுத்துகள்,என்று ஏன் பிரிக்க வேண்டும். இந்த வருட புத்தக திருவிழாவில் கூட சில கருத்துக்களைக் கேட்க முடிந்தது. தலித் இலக்கிய வெளியீடுகள், திராவிட இலக்கிய வெளியீடுகள் என்று..... நாம் வேண்டாம் என்று சொல்லும் விடயங்களைத் தான் இலக்கியம் என்ற பெயரில் நிறைய வருகின்றனவா. இதற்க்கு மேல் ஒருவர் சென்று இரவிக்குமார் படமெடுத்தால் திரைப்படம் அதுவே ரஞ்சித் எடுத்தால் தலித் திரைப்படம். ஜெயமோகன் எழுதினால் இலக்கியம் அதுவே பெருமாள் முருகன் எழுதினால் தலித் இலக்கியம் (ஒரு புலனக் குழுவில் படித்தது). எழுத்தாளர் இமயம் அவர்கள், ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொது, தலித்துகளின் வாழ்க்கையை ஓறு தலித் எழுதினால் அது தலித் இலக்கியம் என்றும், அதையே வேறு ஒருவர் எழுதினால் இலக்கியம் என்று அழைக்கும் போக்கு தவறானது என்றார். தலித் எழுத்து என்றோ தலித் எழுத்தாளர் என்றோ பிரிப்பது சரியல்ல என்பது அவருடைய வாதம்.


மேலும் திருவள்ளுவர் கருத்து முக்கியமா? இல்லை அவருடைய மதம் மற்றும் ஜாதி முக்கியமா... அவருடைய கருத்துக்கள் யுகங்கள் தோறும் மாறி மாறி பல புதிய சிந்தனைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருகின்றன. நாம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு அவருடைய மதத்தைப் பற்றி சிந்திப்பது எவ்வளவு ஒரு சிறு பிள்ளைத்தனம். அனைத்திலும் அரசியல் தேவையா? ஆனால் இப்பொழுது அனைத்திலும் அரசியலை காண முடிகிறது. மன்னர் ஆட்சியில் அனைத்திலும் அரசியல் தலையீடு இருப்பதை காண முடியும். ஆனால் இப்பொழுது மக்களாட்சி. அரசியல் தலையீடு எல்லாவற்றிலும் தேவையில்லை. அரசியலைப் பற்றி லெனின் சொன்னது "அதிகாரத்தைக் கைபற்றுவது தான் முக்கியமான விடயம்" 


இன்னும் சில பேர் ஒரு படி மேலே சென்று நான் ஒரு திராவிடன், பெரியாரைப் பின் பற்றுகிறேன் என்று கருத்துக்களை கூற முற்படுகின்றனர். ஆனால், பெரியாரின் சிந்தனைகளை அவருக்கு முன்பேயும் அவர் காலத்திலும் பலபேர் சொல்லி சென்று இருக்கின்றனர். அவர்களில் சிலர், புத்தர், கபீர், இராமானுஜர், திருவள்ளுவர், சிவவாக்கியர், அயோத்திதாசர், அம்பேத்கர், விவேகனந்தர், அய்யாவழி நாராயணர், காந்தி, வள்ளலார் (இராமலிங்க அடிகளார்), போன்றவார்களை கூறலாம். பெரியாரும் இந்த வரிசையில் ஒருவர் தான்.


புத்தர் ஒரு வைதீக எதிர்பாளர். இவரின் இயற்பெயர் சித்தார்த்த கௌதமர். சாக்கிய முனி என்றும் அழைக்கப்பட்டார், வைதீகத்தில் உள்ள சாதி மதம், சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தவர். மேலும் ஆசையே துன்பத்திற்கு காரணம். தான் தனது என்ற நிலையில் இருந்து விலகினால் ஞானம் பெறலாம் இதுவே விடுதலை அல்லது நிர்வான நிலை. புத்தரின் சமகால மதங்களாக நாம் சமணத்தையும், வைதீக சமயத்தையும் எடுத்துக் கொள்ளலாம். சமணம், வாழ்கை இல்லல்கள் நிறைந்தது என்றது. ஆனால் புத்தமோ அதற்கு தீர்வு தந்தது. சமண புத்த சமயங்களின் வளர்ச்சிக்கு ஆன்மீக அமைதியின்மையே காரணம். வைதீகம் சடங்குகள் நிறைந்ததாக இருந்தது. இது சாதாரண மக்களின் இன்னல்களை போக்குவதாக இல்லை. மக்களின் இன்னல்களுக்கு வைதீகம் சில சடங்குகளையும் வேள்விகளையுமே முன் வைத்தது. அது போன்ற சடங்குகளை சாமானியர்களால் செய்ய இயலவில்லை. இதன் உணமைகளையும் வாழ்க்கைத் தத்துவங்களையும் விளக்க வந்தவையே சமணமும் பௌத்தமும். வைதீகத்தில் கூறப்பட்டுள்ள தத்துவங்கள் எளிய மக்களுக்கு புரியும் படியாக இல்லை. எளிய மக்கள் மோட்சத்திற்கு செல்லவும் வாழ்க்கையை புரிந்து கொள்ளவும், தத்துவங்களை தெரிந்து கொள்ளவும் வேறு வழிகள் தேவைப்பட்டன. மேலும் இவைகள் மக்களுக்கு புரியும் மொழியில் இருக்க வேண்டும். இந்த தேவைகளை பூர்த்தி செய்ய வந்ததே சமணரான மகாவீரரும், புத்தரான சித்தார்த்தரும். இவ்விரு சமயமும் வணிகச் சமுதயத்தாலும் அவர்களது பங்களிப்பினாலும் வளர்ச்சி கண்டது. மகாவீரரும் புத்தரும் ஆளும் வர்கத்தில் பிறந்தவர்கள். வர்ணாசிரம தர்மத்தில் பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் கிடைத்த இடம் வைசியர்களான வணிகர்களுக்கு கிடைக்க வில்லை. ஆனால் வியாபாரத்தின் மூலம் வணிகர்களின் பொருளாதார நிலை மேம்பட்டு இருந்தாலும், வணிகர்கள் மூலமாக அதிக வரி வருவாய் அரசர்களுக்கு கிடைத்தாலும், சமூகத்தில் மூன்றாம் பிரஜையாக கருதப்பட்டனர். கீழ் சாதியினருக்கு பல சலுகைகள் மறுக்கப்பட்டன. எல்லா சலுகைகளும், அரசர்களுக்கும் பிராமணர்களுக்குமே கிடைத்தன. எனவே வணிகர்களும், மற்றவர்களும் சமணத்தையும் பௌத்தத்தையும் ஆதரிக்க தொடங்கினர். புத்தர் கடவுளைப் பற்றி கவலைப்பட்டவர் இல்லை. கடவுளைப் பற்றியோ வைதீகத்தைப் பற்றியோ ஏதாவது கேட்டால் அமைதியாக இருப்பார் பதில் சொல்லமாட்டார். ஆனால் மனித இன்னல்களுக்கான காரணத்தைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவது பற்றியும் மிகத் தெளிவான போதனைகளை வழங்கி விட்டு சென்றார். பெரியாரிடம் அது இல்லை. அவர் இன்னல்களுக்காக குரல் கொடுத்தார் மக்களைச் சேர்த்து போராடினார். ஆனால், அந்த காலகட்டத்திற்கு தேவையான தெளிவான வழிகாட்டுதல் இல்லாமல் விட்டுச் சென்று விட்டார்.


இப்பொழுது எதை எடுத்தாலும், பெரியாரை மேற்கோள் காட்டுவது என்ற ஒரு தவறான போக்கு வந்து விட்டது. பெரியார் ஒரு கருத்தை ஏன் சொன்னார், எதற்காக சொன்னார், அதன் விளைவு என்ன? என்று தெரியாமல், நான் பெரியாரை படித்தேன் அவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார் என்று சில வரிகளைக் கொண்டு விளக்க முற்படுகின்றனன்ர். இது ஒரு தவறான போக்கு. அது மாற வேண்டும். பெரியாரின் மிகப் பெரிய கொள்கை, எதையுமே உயர்த்தி பிடிக்காதே. தமிழை உயர்த்தினால், உடனே அது ஒரு காட்டு மிராண்டி மொழி என்றார். தமிழ்த்தாய்க்கு சிலை வைப்பதை கண்டித்தார். கண்ணகிக்கு சிலை வைத்து அதை பாராட்டிய பொழுது கடுமையாக நடந்து கொண்டார். கடவுள் வழிபாடு என்று ஒரு கூட்டம் சென்ற போது அதை கண்டித்தார். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார். புத்தர் கூட கடவுள் இல்லை என்று தான் கூறினார். ஆனால், புத்தமதம் வளர்ந்து அது ஒரு நிறுவனமயப் படுத்திய போது புத்தரே கடவுளானார். குரு என்ற நிலையில் இருந்து கடவுள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.


பெரியார் பெண் விடுதலை பற்றி பேசினார், கட்டுபாடற்ற பாலுணர்வு பற்றி பேசினார், பாலுணர்வு சுதந்திரம் பற்றி பேசினார் என்று தனக்கு தேவையான சில கொள்கைகளை மட்டும் எடுத்துப் பேசும் கூட்டம் ஓன்று உருவாக்கி உள்ளது. இதனால், வரப்போகும் பாதிப்பு என்பது மிகப் பெரியது. முக்கியமாக கற்பு என்பது தமிழ்ப் பண்பாடா? என்றால் இல்லை. காதலும் களவு மனமும் தமிழ்ப் பண்பாடு. ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் பிறக்க ஒரு விதமான ஈர்ப்பு இருந்தால் மட்டும் போதாது. உண்மையான அன்பும், புரிதலும், நம்பிக்கையும் வேண்டும். இல்லையென்றால் அது காதல் அல்ல. இவை மூன்றும் இல்லையென்றால் அது, கட்டுபாடற்ற பாலுணர்வு கொள்கை அல்லது பாலியல் புரட்சி ஆகும். இந்த மூன்றும் இல்லாத உறவு காதல் அல்ல அது தமிழ்ப் பண்பாடும் அல்ல. இந்த விடயங்களை இன்றைய தலைமுறையிடம் நாம் சரியாக கொண்டு செல்லாவிட்டால் நாம் பேசும் சமூக நீதி கேள்விக்குள்ளாக்கபடும். சமூக நீதி என்பது இட ஒதுக்கீடு மட்டுமே அல்ல. அதையும் தாண்டி. 


பெரியார் பெண்கள் மட்டுமே ஒழுக்க விதிகளுடன் வாழவேண்டும், ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று இருந்த சமுதாயத்தில் சொன்ன கருத்துக்களை இப்பொழுது பொருத்திப் பார்ப்பது தவறு. பாரதியார் கூட, கற்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என்றார். பெரியார் அவருடைய பாணியில், "கணவனைத் தவிர பெண் மற்ற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ள பெண்களுக்கு உரிமை வேண்டும்" என்றார். விசயங்களை மொத்தமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இப்பொழுது புதிதாக வந்த பெரியாரியவாதிகளும், போலி முற்போக்காளர்களும் பேசுவதைப் பார்த்தால், பயமாக இருக்கிறது. மீண்டும் நாம் காட்டு மிராண்டி வாழ்க்கைக்கு திரும்பி விட்டோமா என்று. பெரியார் கேட்டது என்னவென்றால் பெண்ணுக்கு வகுக்கப்பட்ட ஒழுக்க நெறி ஆணுக்கு ஏன் வகுப்படவில்லை. பெரியார் வகுக்கப்பட்ட ஒழுக்கத்தைதான் எதிர்த்தாரே ஒழிய சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீரழிய வேண்டும் என்று சொல்லவில்லை.

தொடரும்

Wednesday, February 9, 2022

புதியதலைமுறை

 புதியதலைமுறை - 06.02.2022


புவனேஷ் ஒரு கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வேலைக்கு வந்த ஒரு இளைஜன். இவனுடைய முதலாளி நகரத்தில் புதிதாகத் துவங்கிய ஒரு கிளைக்கு இவனை மேனேஜராக நியமித்து இருந்தார். இவனும் இவனுண்டு இவன் வேலை உண்டு என்று இருந்து வந்தான். வேலையும் கையுமாக நாட்கள் ஓடின. ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு படியேறிச் செல்லும் போது எதிர்த்த வீட்டு மாடியில் ஒரு பெண் ஒரு பாட்டிக்கு உதவியாக நடந்து செல்வதை எதேச்சையாக பார்த்தான். அவள் இவனைக் கவனிக்கவில்லை. இவனும் தற்செயலாக ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் பார்த்துச் சென்று விட்டான்.

ஒரு நாள் புவனேஷ் ஆபிஸ் செல்வதற்காக கிளம்பினான். நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு காலை வேளை. மிகவும் ரம்மியமான ஒரு சூழல். ரசித்துக் கொண்டு நின்றிருந்தான். வெய்யில் பூமியில் பிறந்த ஒருவனுக்கு மழை என்றால் கேட்கவா வேண்டும். மழை என்றாலே ஒரு கொண்டாட்டம் தான். இருப்பதை விட இல்லாததை நினைத்துக் கொண்டாடுவது மனித இயல்பு. 

கவிதா நர்சிங் முடித்து விட்டு ஒரு வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தாள். அவர்கள் வயதானவர்களைக் கவனிக்க ஹோம் நர்ஸ் அனுப்பும் சர்வீஸ் செய்து கொண்டு இருந்தார்கள். அதற்கு சர்வீஸ் சார்ஜ் வாங்கிக் கொள்வார்கள். அதில் ஒரு பகுதி அங்கு வேலை செய்பவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். அவளும் சொந்த ஊரை விட்டு விட்டு இங்கு ஒரு வீட்டில் ஹோம் நர்ஸாக வேலை செய்து கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது வேலை செய்யும் வீட்டில் ஒரு வயதான 85 வயது நிறைந்த ஒரு பாட்டி இருக்கிறாள். அவர்கள் வீட்டின் எதிபுற மாடியில் தான் புவனேஷ் குடியிருக்கிறான். கவிதா பாட்டிக்கு உதவி செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவளின் பொழுது போக்கு மொட்டை மாடியில் நிழலில் நின்று வேடிக்கை பார்ப்பது தான். அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது, யதேச்சையாக வேலைக்கு கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்த புவனேஷை கவனித்தாள். இவளைப் போலவே அவனும் மழையை ரசித்துக் கொண்டிருந்தான். கவிதா காலை மற்றும் மாலை வேலைகளில் இவனைக் கவனிக்க தவறுவதேயில்லை. அவளுக்கொரு சிந்தனை. யார் இவன்? காலையில் கிளம்பினால் இரவுதான் வருகிறான் அதுவும் மிகவும் தாமதமாக. எப்பொழுதுமே வேலை தானா. என்ன வேலை செய்கிறான். ஏதாவது சொந்தமாக தொழில் செய்து கொண்டு இருக்கிறானா? இந்து வந்து சில நாட்கள் ஆகி விட்டன. ஆனால் மாடியில் அதிகமாக காண முடிவதில்லேயே? என்று தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தாள். 

அவளும் மழையில் நனைந்து கொண்டு மழையையும் மழையால் குளித்த ஊரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மழை பூமிக்கு இறைவனால் கொடுக்கப் பட்ட ஒரு கொடை. பாவப்பட்ட மனிதனின் கண்ணீரை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கான அருட்கொடை. உழவனின் உணவு உற்பத்திக்காக கடவுள் கொடுத்த முதலீடு. ஓடும் மழை நீர் மனிதனின் மன அழுக்கை துடைத்து புது மனிதனை மனிதத்தை உருவாக்க நினைக்கிறது. ஆனால் மனிதன் மனிதத்தை மறந்து போனான். 

"கவிதா........ " பாட்டி அழைப்பது கேட்டது. 

"சொல்லுங்க பாட்டி "

"எனக்கு உட்கார்ந்து இருக்கக் கொஞ்சம் சிரமமாக உள்ளது. என்னை கொஞ்சம் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று படுக்க வை, அப்புறம் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்."

"இதோ தருகிறேன் பாட்டி"

பாட்டிக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுத்து விட்டு, உணவுக்கு முன் சாப்பிட வேண்டிய சில மருந்துகளையும் கொடுத்துவிட்டு, பின் மெதுவாக கைத்தாங்கலாக பாட்டியை அழைத்துச் சென்று அவருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கட்டிலில் படுக்க வைத்து, தலைப் பகுதியை சற்று உயர்வாக வைத்தாள். பாட்டி சாப்பிடுவதற்கு இன்னும் அரை மணி நேரம் உள்ளது. அரை மணி நேரம் கழித்து உணவு எடுத்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் மாடிக்கு வந்தாள். மழை நின்று விட்டது. எதிர்த்த வீட்டு மாடியிலும் அவனைக் காணவில்லை. வேலைக்கு சென்று விட்டான் போலும். 

புவனேஷ் அன்று அலுவலகம் செல்லாமல் நேராக வாடிகையாளரை காண சென்றான். வாடிக்கையாளர் இன்று தருவதாக சொன்ன காசோலையை வாங்கிக் கொண்டு "வேறு ஏதாவது ஆர்டர்கள் இருக்கா?" என்று கேட்டான். வாடிக்கையாளரும் "எங்கே சார் ஆர்டர்? முன்னாடி மாதிரியெல்லாம் வியாபாரம் இல்லை சார். எல்லோரும் குவாலிட்டி பார்க்காமல் விலையைத்தான் பார்கிறார்கள். அப்ப எல்லாம் வாங்கும் பொருள் நல்லதா இருக்கா? இது தேவையா? எவ்வளவு நாள் நாம் உபயோகிக்க முடியும் என்று பார்த்து வாங்குவார்கள். இப்பொழுது எல்லாம் கண்ணுக்கு கவர்ச்சியாகவும் விலை மலிவாகவும் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள்" 

"அம்மாடி....." என்று கடையின் உள்ளே திரும்பி வேலை செய்யும் பெண்ணைப் பார்த்து "ஏதாவது வேண்டுமாம்மா" என்று கேட்டார். அவளும் ஒரு துண்டு சீட்டில் தேவையான பொருட்களை எழுதி புவனேஷிடம் தந்தாள். 

வாங்கிக் கொண்டு அலுவலகம் வரும் போது மதியம் ஆகி விட்டது. புவனேஷ் அந்த ஆர்டரை ஒரு ஓரமாக வைத்து விட்டு ஆபிஸ் பையனை அழைத்து அந்த காசோலையை பாங்கில் செலுத்திவிட்டு வருமாறு பணித்தான். பின் தன்னுடைய வேலையில் முழுகி விட்டான். ஆங்கிலத்தில் சொல்வது போல வொர்க்கஹாலிக். வேலை என்று வந்து விட்டால் அது முடியும் வரை உலகம் கண்ணை மூடிக் கொள்ளும்.

கவிதாவும் மாடிக்கு வரும் போதெல்லாம் அவளை அறியாமல் எதிவீட்டைப் பார்ப்பதை ஒரு வழக்க்கமாக வைத்து இருந்தாள்.  ஏன் இப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. எதிர்வீட்டு மாடிக்கு அருகிலேயே இன்னொரு வீடும் கட்டப்பட்டு கொண்டிருந்தது. வீடு மேலே எழுந்து முதல் தளம் வரை வந்து விட்டது. அதில் எல்லோருமே வெளி மாநிலத்தவர். அங்கேயே தங்கி, அங்கேயே சமைத்து, உண்டு, உறங்கி வேலை பார்த்து வந்தனர். அதனால் வேலையும் சீக்கிரமாக நடந்தது. அதையும் வேடிக்கை பார்த்தாள். பாட்டிக்கு காலை மாலை இருவேளை வாக்கிங் அழைத்துச் செல்வது, மூன்று வேளை உணவு எடுத்து வந்து கொடுப்பது, மாத்திரை மருந்து கொடுக்க வேண்டிய நேரத்துக்கு கொடுத்து விட்டால் வேறு வேலை ஒன்றும் இல்லை. பின் பாட்டி அழைத்தால் உதவிக்கு செல்ல வேண்டும். பாட்டிக்கு ஓய்வு அதிகம் தேவைபடுவதால் டிவியும் பார்க்க முடியாது. அது ஒரு விதமான தனிமை.

அன்று இது போல் ஒரு காலை வேளையில் நித்தியபடியாகச் செய்யும் எல்லா வேலையும் முடித்துவிட்டு மொட்டை மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை அறியாமல் அவளின் பார்வை எதிர் வீட்டு மாடிக்கு சென்றது. மணி சுமாராக 11 இருக்கலாம். புவனேஷ் வீட்டின் கதவு திறந்து இருந்தது. சாதாரணமாக இந்த வேளையில் கதவு திறந்து இருப்பது இல்லையே என்ற சந்தேகப் பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது புவனேஷ் வீட்டைப் பூட்டிக் கொண்டு எதோ ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பினான். கவிதா எதோ ஒரு உந்துதல் காரணமாக தன்னை அறியாமல் அவனைப் பார்த்து கையை அசைத்தாள். ஆனால் அவன் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தன்னை தானே நொந்து கொண்டு, செய்தது தவறு என்று உள்ளுணர்வு பயம் காட்ட, திரும்பாலாம் என்று நினைத்தவளுக்கு அங்கே புவனேஷும் கை காட்டுவது போல் தெரிந்தது. இவள் சிரித்தாள். அவனும் இவள் சிரிக்கிறாள் என்று தோன்ற அவனும் சிரித்து வைத்தான். பின் கிளம்பிச் சென்று விட்டான். இரண்டு நாட்கள் கழித்து திரும்பி வந்தான். அவளும் எதிர் மாடியில் இருந்து சைகை மூலம் எங்கே காணோம் என்று கேட்க இவனும் சைகை மூலமே வெளியூர் சென்றதை தெரிவித்தான். இந்த சிரிப்பும் கையசைப்பும் சில நாட்கள் தொடர்ந்தன. 

ஒருநாள் கவிதா மாடியில் இருந்து கொண்டு போன் நம்பர் என்ன என்று சைகை செய்தாள். இவனும் சைகை மூலமே நம்பரைச் சொல்ல அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. பின் பாட்டி அழைப்பதைக் கேட்டு உள்ளே சென்று விட்டாள். 

புவனேஷ் அன்று இரவு தன்னுடைய மொபைல் நம்பரை ஒன்று ஒன்றாக பேப்பரில் எழுதி அவற்றை முறையாக வெட்டி நம்பர் கார்டு செய்தான். அடுத்த நாள் ஆபிஸ் கிளம்பும் போது அதையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தான். சாரல் மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சாரல் மழை காரணமாக பக்கத்தில் வீட்டு வேலை செய்யும் தொழிலார்கள் மழைக்கு நனையாமல் ஓரமாக ஒதுங்கி நின்று இருந்தனர். கவிதாவும் பாட்டிக்கு தேவையான ஒத்தாசைகள் எல்லாம் செய்து முடித்துவிட்டு தனிமையைக் கழிக்க மொட்டை மாடிக்கு வந்தாள். புவனேஷை கண்டவுடன் ஒரு மகிழ்ச்சி. ஒரு பூரிப்பு.இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா என்று கைகைளை அசைத்துக் கேட்டாள். இவனும் இல்லையென்று சைகை செய்தான். 

பின் தான் வைத்திருந்த நம்பர் கார்டை ஒன்று ஒன்றாக வரிசைப்படி எடுத்துக் காண்பித்தான். முதலில் கவிதாவுக்கு புரியவில்லை. பின் உள்ளே சென்று பேனா பேப்பர் எடுத்து வந்து குறித்துக் கொண்டாள். பின் புவனேஷ் ஒரு விரலை காதின் பக்கமும் மற்றொன்றை வாயின் பக்கமும் வைத்து போன் பேச சொல்லிவிட்டு கிளம்பினான். பக்கத்துக்கு வீட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களும் இதனைக் கவனித்தனர். புவனேஷ் மனதில் அவர்கள் இருப்பதை மறந்து விட்டோமே என்று தோணல். அவன் அவர்களைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு, முகத்தில் தோன்றிய அசட்டுக் களையை துடைத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினான். 

அலுவலகம் வந்ததுமே தினசரி வேலைகளைக் கவனித்து கொண்டு காலையில் நடந்ததை மறந்தே போனான். சரியாக ஒரு மூன்று மணியிருக்கும். ஒரு புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. வேலையின் காரணமாக அதை எடுக்கவில்லை. மீண்டும் சிறிது நேரம் கழித்து அதே நம்பரில் இருந்து அழைப்பு. புவனேஷ் புதிய வடிகையளராக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் போனை எடுத்து பேசினான். 

"ஹலோ.... ஐ ஆம் புவனேஷ், யார் பேசுறது" 

"ஹலோ....." என்று ஒரு பெண் குரல். மிகவும் தயக்கத்துடன், படபடப்பாக... மீண்டும் "ஹலோ....." என்றது அந்த குரல். இப்பொழுது அது கிணற்றுக்குள் இருந்து வருவது போல் கேட்டது. 

புவனேஷ் " நீங்கள் பேசுவது எனக்கு கேட்கிறது? யார் பேசுவது. உங்களுக்கு என்ன வேண்டும்" என்றான். 

"நான்..... நான் தான்... கவி..... கவிதா....."

"சொல்லுங்க கவிதா.... உங்களுக்கு என்ன வேண்டும்." என்று ஒரு வாடிக்கையாளரிடம் பேசுவது போல பேசினான். 

"என்னைத் தெரிகிறதா? நான் யார்.... ரென்று" என்றது அந்த பெண்ணின் குரல்.

வேலைப்பளுவின் காரணமாக புவனேஷ் சற்று கோபத்துடன் "நான் வேறு வேலையில் பிசியாக இருக்கிறேன். போனில் எல்லாம் முகம் தெரியாது. அழைத்த விவரத்தைக் கூறுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்"

"நான் வேண்டுமென்றால் பிறகு கூப்பிடட்டுமா...." என்று தயக்கத்துடன் கேட்டது அந்த பெண்ணின் குரல்.

"வேண்டாம். எனக்கு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியுள்ளன. என்ன வேண்டும் என்று கூறுங்கள். வியாபாரம் சம்பந்தமாக பேச வேண்டுமென்றால் நான் உங்கள் அழைப்பை என்னுடைய விற்பனைப் பிரிவுக்கு மாற்றி தருகிறேன். அவர்களுடன் பேசுங்கள்" என்று தொடர்பை மாற்ற போனான். 

"இல்லை. கொஞ்சம் பொறுங்கள். நான் தான் கவிதா.... உங்கள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டில் உள்ளவள்..... அந்த பாட்டிக்கு...." என்று முடிக்கும் முன்பே புவனேஷ் குறுக்கிட்டான். 

"சொல்லுங்க கவிதா..... சாரி.... இன்று கொஞ்சம் பிசியாக இருந்ததால் நான் உங்களுக்கு நம்பர் கொடுத்ததை மறந்து விட்டேன். இதுவரை உங்களுடம் பேசாததால் உங்கள் பெயர் எனக்கு தெரியாது. உங்கள் குரலையும் தெரியவில்லை. சாரி.... என்னுடைய பெயர் புவனேஷ்"

மேலும் தொடர்ந்தான். "நீங்கள் கீழ் வீட்டில் இருக்கும் கனகராஜின் மகளா.... அது உங்கள் பாட்டியா.... என்ன படிச்சுருக்கிறீங்க..." 

"இல்லை... நான் கனகராஜின் மகள் அல்ல.... நான் நர்சிங் படித்து விட்டு இங்கு ஹோம் நர்சாக வேலைக்கு வந்துள்ளேன். பாட்டியை கவனித்துக் கொள்வது தான் என் வேலை"

"பாட்டி கனகராஜின் அம்மாவா..."

"ஆமாம். அவர்களுக்கு 85 வயது ஆகிறது. சுகர், பிரஷர் மற்றும் வயதின் காரணாமாக உள்ள பாதிப்புக்கள் எல்லாம் உள்ளன. நடப்பது, தனியே செல்வது, இருப்பது எல்லாம் கடினம்"

"இவர்களைப் போன்றவர்களைப் பார்த்துக் கொள்வதற்கு மிகப் பெரிய பொறுமை, சகிப்புத் தன்மை  வேண்டும் அல்லவா."

"ஆமாம்...... வேலைப்பளு குறைவுதான். ஆனால் தனிமை தான் அதிகம். குழந்தைகளோ வீட்டு அம்மாவோ மேலே வர மாட்டார்கள். கனகராஜ் சார் மட்டும் தினமும் ஒருதடவை மாலையில் வருவார். வரும்போது பாட்டி மிகவும் சந்தோசப்படுவார்கள். அவரும் சில நிமிடங்கள் இருந்து விட்டு சென்று விடுவார். நானும் பாட்டியும் மட்டும் தான். பாட்டி ஒய்வு எடுக்கும் பொழுது நான் மொட்டை மாடியில் வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பொழுது தான் உங்களைக் கவனித்தேன்." 

"ஆஹா.... ம்...... நல்லது" என்றான் புவனேஷ்.

"நீங்கள் என்னை கவனிக்கவே இல்லை. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்பது போல் காலையில் சென்றால் இரவு திரும்புவது என்று இருந்தீர்கள். என்னமோ தெரியவில்லை, உங்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதான்..." என்று இழுத்தாள் கவிதா.

"அதனால் என்ன.... தாரளமாக....."

"சரி மீண்டும் சமயம் கிடைக்கும் போது பேசுகிறேன். பாட்டி அழைக்கிறார்கள்" என்று போனை கட் செய்து விட்டு சென்றாள்.

போனில் பேசிய பிறகு புவனேஷுக்கு கை கால் ஓடவில்லை. நினைவுகள் தேங்கி விட்டன. எதோ பறப்பது போல ஒரு உணர்வு. எத்தனை நேரம் போச்சு என்று தெரியவில்லை. மனது மிகவு லேசாக, உடம்பு ரொம்ப லேசாக. மனது முழுவதும் மகிழ்ச்சியுணர்வு.எதோ கிடைக்காத ஒன்று கை கூடியது போல. தெய்வத்தின் முன் அவன் மட்டும் நிற்பது போன்ற பரவச நிலை. தீடிரென்று கதவு தட்டும் சப்தம். புவனேஷின் கீழ் வலை செய்யும் ஒருவர் "மே ஐ கம்மின்" என்றார்.

"எஸ். ப்ளீஸ்....." என்றான் புவனேஷ்

"சார் எச் ஓ வுக்கு அனுப்புவதற்கு ஒரு ரிபோர்ட் தருவதாக சொன்னீர்கள். ஆனால் இன்னும் வரவில்லை. கொரியர் பாய் வேறு வந்து விட்டான். அதான்...." என்று சொன்னான். 

உடன் புவனேஷ் நினைவு திரும்பியவனாக "ஐந்து நிமிடம்.... இப்பொழுதே தருகிறேன் ... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று விட்டு தன்னுடைய அலுவலக வேளையில் முழுகினான். எப்படி தன்னையே மறந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை.

பின்னர் வழக்கம் போல காணும் போது சைகைப் பேச்சு தொடர்ந்தது. மூன்று நாட்கள் கழித்து அதே போல் ஒரு உரையாடல். புவனேஷ் அவனைப் பற்றியும் கவிதா அவளைப் பற்றியும் பேச ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றனர். இருவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறினர். எப்பொழுதாவது வெளியில் செல்லும் பொது சந்திக்க நேர்ந்தாலும் ஒரு புன்னகை தவிர வேறொன்றும் இல்லை. மற்றவர்கள் பார்த்து தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதால்.

இப்படியே சென்று கொண்டிருந்த நட்பு, 6 மாதங்களில் அதன் அடுத்த பரிமாணத்தை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. அவளுக்கு இந்த வீட்டினருடன் இருந்த ஒப்பந்த காலம் முடிந்து செல்ல வேண்டிய நேரமும் வந்தது. ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றுதான் நம்பியிருந்தாள். ஆனால் நீட்டிக்கப்படவில்லை.

புவனேஷ் கவிதாவின் நம்பரைப் பார்த்து போனை எடுத்துப் பேசினான். 

"சொல்லு கவிதா..."

"அடுதவாரம் 10 தேதியுடன் என்னுடைய இந்த வீட்டுடனான காண்ட்ராக்ட் முடிகிறது. அவர்கள் நீட்டிக்கவில்லையென்றால் நான் 10 ம் தேதியுடன் செல்ல நேரிடும். என்னுடைய கம்பெனி என்னை மதுரைக்கு வரச் சொல்லுவார்கள். அங்கு சென்று வேறு ஏதாவது வாய்ப்பு இருக்கா என்று தெரிந்து கொள்ள வேண்டும் மேலும் இந்த ஒப்பந்த காலத்திற்கான பாக்கி சம்பள தொகையையும் பெற்று கொள்ள வேண்டும். பின் வீட்டிற்கு சென்று ஒரு வார காலம் ஒய்வு எடுத்து விட்டு வேறு வாய்ப்பு கிடைத்தால் அங்கு செல்ல வேண்டும்"

எதோ ஒரு சிந்தனையில் "ம்.........." என்றான்.

"என்ன ம்....."

"இல்லை யோசிக்கிறேன்"

"என்ன யோசனை"

இந்த குறுகிய கால நட்பு, என்னுடைய ஒரு கனாக் காலமாக மாறப் போகிறதை நினைக்கும் போது ஒரு வருத்தம். என்னால் மறக்கக முடியாது. ஏன் மீண்டும் இந்த ஊர் தான் வேண்டும் என்று கேட்டு வாய்ப்பு கிடைத்தால் வரமுடியாதா?

"இங்கு கேட்டு வாங்க முடியாது. அவர்கள் தருவதைத்தான் ஏற்று கொள்ள வேண்டும்"

"முயன்றால் முடியாதா?"

"முயன்று பார்க்கலாம்"

"எப்பொழுது மதுரைக்கு"

"10 ம் தேதி இரவு"

"நானும் அலுவலக விசயமாக அன்று இரவு மதுரை செல்ல உள்ளேன். ஒன்றாக செல்லலாமா?"

"ஐயோ.... சந்தோசம்...... நல்லா வாங்க, எனக்கும் ஒரு வழித்துணை."

10 ம் தேதி இருவரும் ஒன்றாக மதுரைக்கு புறப்பட்டோம். இருவருக்கும் அடுத்தடுத்த இருக்கை. நடத்துனர் வந்து டிக்கெட் கொடுக்கும் வரை பிரகாசமாக எறிந்த விளக்கு, அவர் சென்று அவருடைய இருக்கையில் அமர்ந்ததும் அணைக்கப்பட்டது. ஒரு சிறிய விளக்கொளி மட்டும். இந்த இரண்டு ஜோடி கண்களைத் தவிர மற்ற கண்கள் எல்லாம் கனவுலகம் சென்றுவிட்டன. மௌனம். வார்த்தைகள் பேச முடியாததை மௌனம் பேசும். உள்ளங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தன. இரவின் அரசி, தன்னுடைய மேனியெங்கும் வைரங்கள் போன்று மின்னும் நட்சத்திரங்களை ஆடையாக அணிந்து வானில் பிரகாசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் நிலவில் பாட்டி உடகார்ந்து கொண்டு வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள். இரவின் அரசியும், நிலவின் பாட்டியும் இந்த இருவரையும் பத்திரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அவளுடைய கையை எடுத்து தனது கைக்குள் வைத்துக் கொண்டு மூடினான். அவள் அவன் மேல் ஆதாரவகச் சாய்ந்து கொண்டாள். இருவரின் கண்களும் உறங்கவில்லை உள்ளங்களும் உறக்கத்திற்கு விடுமுறை அளித்தன.

காலை சரியாக 5.30 மணியளவில் மதுரை வந்து சேர்ந்தார்கள். இருவரும் தேநீர் அருந்திவிட்டு நின்றார்கள். 

அவள் புவனேஷைப் பார்த்து, "எங்கே தங்கப் போகிறீர்கள்"  என்றாள். 

"எப்பொழுதுமே நான் மதுரை வந்தால் கணேஷ் லாட்ஜில் தான் தங்குவேன். என்னுடைய வாடிக்கையாளர்களில் பலர் அதன் அருகில் தான் உள்ளனர்"

"உங்கள் வீட்டில் உங்களது கல்யாண ஏற்பாடுகள் ஏதாவது..." என்று சாதாரணமாகப் பேசுவது போல மெதுவாகக் கேட்டாள்.

"அம்மா அப்பா பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், இன்னும் முடிவாகவில்லை."

"உள்ளூர் பெண்களை மட்டுமா பார்க்கிறார்கள். இல்லை வெளியூர் என்றாலும் பார்க்கிறார்களா?"

"உள்ளூர் வெளியூர் என்று இல்லை. எங்கிருந்தாலும்..... ஆனால் பெண் கொஞ்சம் படித்தவளாக மிகவும் பொறுமைசாலியாக, எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பெண்ணாக எங்களுடைய கட்டுமானத்தில் உள்ள பெண்ணாக பார்க்கிறார்கள். இல்லையென்றால் ஒதுக்கி வைத்து விடுவார்கள்."

புவனேஷ் சொன்னவுடன் அவள் கண்கள் லேசாக நனைந்தன. அதை கவிதா வெளிக்காட்ட விரும்பவில்லை. வேறு பக்கம் திரும்பி அதை மறைத்து, பின் புவனேஷைப் பார்த்து,

"சரி..... நான் கிளம்புகிறேன். அலுவலகம் திறந்திருக்கும். எனக்காக யாரவது காத்துக் கொண்டிருப்பார்கள். அங்கேயே ஒரு கெஸ்ட் ரூம் உள்ளது. அங்கு சென்று ரிப்போர்ட் செய்து விட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு குளித்து ரெடியாகி மற்ற வேலைகளைப் பார்க்க வேண்டும்" என்று சொன்னாள்.

உடன் புவனேஷ் "கவி...... உன்னை தொடர்பு கொள்ள வேறு ஏதாவது நம்பர் இருக்கிறதா....."

"எங்கள் கம்பெனி விதிகளின் படி, நாங்கள் தனியாக நம்பர் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. நாங்கள் செல்லும் இடங்களில் உள்ள நம்பர்களையே பயன்படுத்தவேண்டும். அதனால் நானே உங்களை அழைக்கிறேன்" என்றாள்.

"அப்படியென்றால் இதுநாள் வரை நீ என்னை தொடர்பு கொள்ள உபயோகித்த நம்பர் என்னவாயிற்று"

"அது அந்த வீட்டில் பாட்டியை கவனித்துக் கொள்வதற்காக உபயோகபடுத்திய ஒரு நம்பர். வரும் போது அவர்களிடமே கொடுத்து விட்டேன்."

இருவரும் சிறிது நேரம் மௌனமாக நின்று விட்டு பிரிந்து சென்றார்கள். புவனேஷுக்கு வேலை ஒன்றும் ஓடவில்லை. அவளின் நினைப்பு. விடுதியிலேயே இருந்தான். என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஒருவழியாக அன்றைய பொழுது கடந்தது. மீண்டும் இரவின் ராணி வந்தாள். ஒன்றும் புரியாத தனிமையாக அந்த இரவு கடந்தது. அவள் அழைப்பாள் பேசலாம் என்றிருந்த புவனேஷுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். காலையில் அவளுடனான உரையாடல் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மறுநாள் காலை எல்லா அலுவலக வேலையையும் அவசர அவசரமாக செய்து முடித்து தன்னிடம் திரும்பினான். ஆனால், சிந்தையெல்லாம் கவிதா..... 

ஒரு ஆணுக்கு எப்பொழுதுமே ஒரு பெண் துணை தேவைப்படுகிறது. அம்மா, அக்கா, மனைவி, மகள், சகோதரி, சொந்தக்காரி, தோழி....... ஒரு பெண்ணின் அன்பும் அருகாமையும் இல்லாத நிலையில் தான் பெண்மை உணரப்படுகிறது. இருக்கும்போது நாம் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை.  அதன் மகிமை தெரிவதில்லை.

எதிர்வீட்டை காண நேரும்போதெல்லாம் மனதிற்குள் ஒரு வெறுமை.... தொண்டை அடைக்கும் உணர்வு. எதுவும் இல்லாத வெறுமையில், எது எதை அடைக்கும் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அதை மறப்பதற்காகவே அலுவலகத்தில் முழு மூச்சில் வேலை செய்தான் புவனேஷ். கம்பெனியும் நல்ல நிலைமையில் சென்று கொண்டிருந்தது.

ஒரு வருடம் உருண்டோடியது. ஒரு புது நம்பரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதை புவனேஷ் எடுத்தவுடன், அவனைப் பேச அனுமதிக்காமல்.....

"ஹாய் புவனேஷ்....."

"எஸ் புவனேஷ்...... யார் பேசறீங்க....."

"ஹே.... என்னை தெரியல... வாய்ஸ் வச்சு ஐடெண்டிபை பண்ண முடியலையா?"

புவனேஷ் யோசித்துக் கொண்டே. "இல்லை....." என்றான். அவனுக்கு சந்தேகம் இது கவிதாவாக இருக்குமோ என்று.....  ஆனால் அவள் பேசும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் சரியாக கணிக்க முடியவில்லை.

"ஓகே கே.... ரொம்ப முளிக்காதீங்க.... நான்தான் கவிதா. எப்பிடி இருக்கீங்க....."

புவனேஷும், "ஹாய், கவி...... எப்பிடி இருக்க... ரொம்ப நாளாச்சு..... பேச்செல்லாம் மாறிப்போச்சு.... இப்போ எங்க இருக்க? உன்னைப் பார்க்கணும் போல இருக்கு பேசணும் போல இருக்கு." என்றான் மிக ஆவலுடன்.

"நான் இப்போ பெங்களுர்ல ஒரு தமிழ் குடும்பத்துல ஒரு தாத்தாவைப் பார்த்துக்க வந்துருக்கேன். இங்கே வந்ததால பேச்சு வழக்கு கொஞ்சம் மாறிடுச்சு.... உங்களை மறக்கணும் நட்பை கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காக தான் நான் உங்களைத் தொடர்பே கொள்ளவில்லை. தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்"

"நல்லது.... எனக்கும் புரிகிறது..... இதுதான் உன்னுடைய நம்பரா?"

"இல்லை இதுவும் இங்கு எனக்கு தரப்பட்ட நம்பர். நான் நாளை காலை உங்கள் ஊரில் இருப்பேன். அங்கு ஒரு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு திரும்பிவிடுவேன். அன்று நான் உங்கள் அறையில் தங்கிக் கொள்ளலாமா.... அனுமதி கிடைக்குமா" என்றாள்.

"தாராளமாக.... நான் பஸ் ஸ்டான்ட் வந்து பிக்அப் செய்யட்டுமா"

"ஓகே.... அங்கு வந்தவுடன் நான் உங்களை அழைக்கிறேன்..... பை... குட் நைட்" என்று இணைப்பை துண்டித்தாள்.

நட்பு தொடர்கிறது மீண்டும்.

Tuesday, February 8, 2022

மூவேந்தர்

 மூவேந்தர் - 08.02.2022

 மூவேந்தர் என அழைக்கப்படுபவர்கள் சேர சோழ பாண்டிய மன்னர்களாவர். இவர்களே பண்டைய தமிழகத்தையும் தென்னிந்தியா முழுமையுமே ஆண்டவர்கள். இவர்களில் பாண்டியர்கள் நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளவர்கள். உலகத்திலேயே மிக நீண்ட நெடுங்காலம் ஆண்ட மரபை உடையது பாண்டிய பேரரசு. எந்த மன்னர் குலத்துக்கும் இல்லாத நீண்ட வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. 

 பாண்டியர்களின் கொடி மீன் கொடியாகும். இவர்களின் தலைநகரம் மதுரை ஆகும். வைகை ஆற்றுப் பகுதியே பாண்டியப் பகுதியாகும். மற்றொரு வற்றாத ஜீவ நதி தாமிரபருணியும் ஓடியது. பாண்டியர்கள் ஆண்ட பகுதிகளாக மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற பகுதிகளாகும். இவர்கள் வேப்பம்பூ மாலை அணிவார்கள். பாண்டியர்கள் தங்கள் பெயர்களுடன் மாறன், வழுதி, வர்மன், செழியன், முதுகுடுமி போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். இவர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டனர். பாண்டிய முத்துக்கள் உலகத்திலேயே மிகர் சிறந்த முத்துக்களாக கொண்டாடப்பட்டன.  இவர்கள் கிபி 14-ம்  நூற்றாண்டு வரை சிறப்பாக இப்பகுதியை ஆண்டனர். 

 சோழர்களின் கொடி புலிக் கொடியாகும். நெல் அதிகமா விளையும் பகுதி சோழ நாடாகும். "சோழநாடு சோறுடைத்தது" என்பது பழமொழி. சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுபடுகையிலேயே தோன்றியது. கிபி 2-ம்  நூற்றாண்டுக்கு பின்னர் வலிமை குறைந்து சிற்றரசராகி பின் கிபி 9-ம்  நூற்றாண்டில் மீண்டும் வலிமை பெற்றுத் தெற்காசியா முழுவதும் தன் குடையின் கீழ் கொண்டு வந்து ஆண்ட வம்சம். கிபி 13-ம்  நூற்றாண்டு வரை சோழராட்சி நிலவியது. பின் மீண்டும் சரியத் தொடங்கியது. சோழர்கள் அத்தி மாலை அணிந்திருந்தனர். இவர்கள் தங்களை சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சென்னி, வளவன், கிள்ளி, ஆதித்யன், இராஜராஜன் போன்ற ஓட்டுகளைச் சேர்த்துக் கொண்டனர்.. 

 சேரர்கள் தமிழகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியை ஆண்ட மன்னர் வம்சம் ஆகும். கரூர் மற்றும் வஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆண்டு வந்தனர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். இப்போது கேரளா மாநிலமாக உள்ள சில பகுதிகளும், தமிழகத்தின் கோவை மற்றும் கன்னியாகுமரிப் பகுதிகளும் சேர நாட்டுப் பகுதிகளாகும். அமராவதி, நொய்யல் மற்றும் பேரியாறு போன்ற நதிகள் உள்ளன. மலைகளுக்கும் மலையில் விளையும் வாசனை திரவியங்களுக்கும் பெயர் பெற்ற நாடாகும். இவர்கள் தங்கள் பெயர்களுடன் சேரலாதன், குட்டுவன், கடுங்கோ, குடக்கோ, இரும்பொறை, வாழியாதன், கோதை, மாக்கோதை போன்ற ஓட்டுக்களைச் சேர்த்துக் கொண்டனர். சேரர்களின் மாலை பனம்பூ ஆகும். இவர்கள் தங்களை அக்கினிக் குலத்தைச் சேர்ந்தவர்களாக அறிவித்துக் கொண்டனர்

உணர்வு

 உணர்வு - 25.௦9.2021


ஊரின் நடுவே ஒரு அழகான கோயில், பலவிதமான சிற்ப வேலைப்பாடுகளுடன், அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நேரம் போவதே தெரியவில்லை. நம்மில் பலரும் கோயிலுக்கு செல்கிறோம். ஆனால் ஒருவர் கூட கோயிலை முழுமையாக பார்ப்பது இல்லை.கோயில் என்பது ஒரு வழிபடும் இடம் மட்டும் அல்ல. அது ஒரு சமுதாய சின்னம். பண்பாடு நாகரிகம்  மற்றும் நமது கலைகளை வளர்க்கும் ஒரு சமுதாய கூடம். பக்தர்களுக்கு அது ஒரு வழிபாட்டுக் கூடம். நேரடியாக சென்று கருவறை முன் நின்று வழிபடுகின்றனர். அல்லது வரிசையில் சென்று வழிபடுகின்றனர். இன்று அறநிலையத் துறையின் கீழ் பலவேறு கோயில்கள் வருவதால் கோயிலை சுற்றி வர கூட முடிவதில்லை. பரிவார தெய்வங்களை காண கூட அனுமதியில்லை. அவ்வாறு காணவேண்டும் என்றால் நமக்கு ஏதாவது ஒரு அதிகாரியின் துணையோ அல்லது அர்ச்சகரின் துணையோ வேண்டும். இல்லாவிட்டால் எல்லா கோயில்களிலும் ஜருகண்டி.... ஜருகண்டி.... தான். கருவறை வழிபாட்டுக் பின்னர், கோயிலை மூன்று சுற்று சுற்றி விட்டு சிறிது நேரம் அமர்ந்து விட்டு சென்று விடுகின்றனர். சிவன் கோயில் என்றால் சண்டிகேஸ்வருக்கு ஒரு சொடுக்கு அல்லது கை தட்டல் மற்றும் எழுந்து வரும் போது எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து வருவர். ஆனால் அங்கு பலவிதமான சிற்பங்கள் உள்ளன, சித்திரங்கள் உள்ளன, அதில் எத்தனை விதமான கதைகள், கற்பனைகள், காவியங்கள். இவை எதையுமே நாம் ரசிப்பதில்லை, மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவது இல்லை. இங்கு உள்ள ஒவ்வொன்றின் பின்னனியிலும் ஒரு கதை உண்டு, காவியம் உண்டு... மற்றும் காமம், காதல், வீரம், பண்பாடு, சிற்பியின் கை வண்ணம், சிந்தனை அப்பப்பா....

நான்  சென்ற கோயில் பழைமையான நாக வழிபாடு உள்ள ஒரு கோயில். கோயில் திருவிழா என்று நினைக்கிறேன். நல்ல கூட்டம். மக்கள் முகங்களில் எல்லாம் மகிழ்ச்சி. ஊரே உறவினர் மற்றும் விருந்தாளிகள், பகதர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. பிரசங்கி ஒருவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். தெய்வத்தின் பெருமை பற்றியும், வழிபடும் முறைகள் பற்றியும். என்னை பொறுத்தவரை தெய்வ வழிபாடு என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விசயம். மேலும் அது நமக்கு ஒரு மன அமைதியையும், உறுதியையும் தர வேண்டும். பற்றி கொள்வது தானே பக்தி. அல்லாமல் முறைகள் மற்றும் சடங்குகளில் நம்பிக்கை இல்லை. இன்று தெய்வங்கள் மதங்கள் என்ற பெயரில் நிறுவனப் படுத்தப்பட்டு உள்ளது. நிறுவனப் படுத்தும் போது கட்டாயம் முறைகள் மற்றும் சடங்குகள் தவிர்க்க முடியாதவை. சிறிது நேரம் நின்று பிரசங்கம் கேட்டு விட்டு கோயிலுக்குள் சென்றேன். பக்தர்கள் கூட்டம் ஜெ... ஜெ... என்றிருந்தது. நடந்து வந்த களைப்பு வேறு. தெய்வத்தைப் பார்க்கும் துடிப்பு வேறு. திடீரென்று பார்த்தால் நான் கர்ப்பகிரகத்தின் முன் நிற்கிறேன் அடியார்கள் கூட்டம் என்னைத் தள்ளி முன் வரிசையில் நிற்க வைத்து விட்டது. தீபத்தின் ஒளியில் தெய்வத்தைக்  கண்ட பொழுது, ஒரு அமைதி. ஒரு வெறுமை. மனதில் ஒன்றுமே கேட்க தோன்றவில்லை. அவனுக்கு தெரியாதா எனக்கு என்ன வேண்டும் என்று. நான் மட்டும் அங்கு நிற்பது போல் ஒரு அமைதி. அவ்வளவு ஒரு அமைதி. எல்லாம் அவன் செயல். பிரசாதம் வாங்கிக் கொண்டு, பிரகாரம் வந்து வாயிலின் வெளியில் வந்தேன். இன்னும் பிரசங்கம் முடியவில்லை. சிறிது நேரம் நின்று கேட்டேன். 

பிரசங்கம் முடிந்தவுடன் பேசியவர், நாளை ஒரு யாகம் இருப்பதாகவும், அந்த யாகம் முடிந்தவுடன் நாகர் தோன்றி ஆசியருளுவார் என்று கூறினார். எனக்கு ஒரே ஆச்சர்யம். நாகர் தோன்றி ஆசி அருளுவது ஒரு புதுச் செய்தியாக இருந்தது. அதனால் நாளை வருவது என்று முடிவு செய்து கிளம்பினேன். யாரவது சாமியடுவார்கள் என்று நினைத்துச் சென்றேன்.

காலையில் எழுந்து நீராடி விட்டு, தெய்வத்தை மனதில் தொழுது விட்டு கோயிலுக்கு சென்றேன். காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் பசித்தது. கோயிலின் அருகிலேயே ஒரு ஹோட்டல் இருந்தது. சென்று சூடாக நான்கு இட்லியும், ஒரு பில்டர் காப்பியும் குடித்தேன். எனக்கு இந்த ஊர் புதிது தான். நான் நண்பன் ஒருவனைக் காண நீண்ட தூரம் சென்று கொண்டிருந்தேன். வழியில் பயணக் களைப்பு நீங்க கொஞ்சம் தங்கிச் செல்லலாம் என்று இங்கு வண்டியை நிறுத்தினேன். காணும் போதே கிராமத்து திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. புதிய புதிய மனிதர்களையும், அவர்களின் செயல், பேச்சு மற்றும் பண்பாட்டுக் கூறுகளையும் காணும் போது நமக்கு ஒரு புத்துணர்வும் புதிய அனுபவமும் கிடைக்கிறது. நான் என்ற பிம்பம் மாறி நாம் என்ற பிம்பம் கிடைக்கிறது. 

ஊர்த் திருவிழா என்பதால் அனைவரும் புத்தாடை அணிந்து, பலகாரங்கள் பல செய்து, பலருடன் அதைப் பகிர்ந்து ஒரே கோலாகலமாக இருந்தது. இதைப் பார்க்கும் பொழுது, எனக்கு எனது சிறுவயது நினைவலையும், எனது பாட்டியுடன் எங்கள் ஊர் சித்திரை திருவிழாவும் கலந்து கொண்டு கொண்டாடிய தினத்தையும் நினைவு வருகிறது. மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா? மனதில் ஒரு ஏக்கம். 

கோயிலுக்கு சென்றேன், யாகம் நடந்து கொண்டிருந்தது. மந்திர ஒலியைத் தவிர வேறு ஒன்றும் கேட்கவில்லை. எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்பு. வேறு விதமான பேச்சுக்கள் இல்லை. யாகத்தின் நடுவே ஒரு வித்தியாசமான உருவில் ஒரு மிகச் சிறிய உருவம் ஓன்று வெளியே வந்தது போல் எனக்கு தோன்றியது. அது ஒரு நீண்ட வாலுடனும் தலைப்பகுதி ஒரு சிறிய கடற்குதிரையின் உருவத்துடன் தோற்றம் அளித்தது. அது என்னை நோக்கி வந்ததை உணர்ந்தேன். மனதில் ஒரு சிறிய பயம். தொண்டைக்குளிக்குள் ஒரு பந்து மேலேயும் கீழேயும் செல்லாமல் தவிப்பதை என்னால் உணர முடிந்தது. யாகம் நடக்கும் இடத்திலிருந்து ஒரு சப்தம். "உடனே அதனைப் பிடிக்க வேண்டும். அதை குளிர்வித்து சாந்திப் படுத்த வேண்டும்" என்று யாரோ ஒருவர் கத்தினது எனது காதுகளில் விழுந்தது. நான் அதைப் பிடிக்க முயன்ற பொழுது அது என் கையில் இருந்து வழுவிக் கொண்டு சென்றது. கையில் எதோ ஒரு வழுவழுப்பை  உணர்ந்தேன். மீண்டும் அதை பிடிக்க முயன்றேன். அப்பொழுது அது என் கையில் மாட்டிக் கொண்டு விஸ்வரூபம் எடுத்தது. என்னால் நம்பவே இயலவில்லை. சிறிதாக இருந்த ஒரு உருவம் இப்பொழுது பல மடங்கு பெரிதாகி படமெடுத்து நின்றது. கழுத்தில் ஒரு நீல நிறம் தெரிந்தது. கண்கள் கூசின. நீண்ட நேரம் அதை காண இயலவில்லை. என்றாலும் மீண்டும் மீண்டும் பார்த்தேன். என்னைப் போல் எல்லாவருக்கும் ஒரு ஆச்சர்யம் அதிசயம். 

நிமிர்ந்து பார்க்கும் பொழுது அந்த உருவம் விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடுவது போல் இருந்தது. என்னவொரு  அழகு, என்னவொரு ஆனந்தம். அதன் தலை காற்றாடி போல ஆடிக் கொண்டிருந்தது. மிகப் பெரிய ஒரு குடையின் கீழே நாங்கள் இருப்பதைப் போல் உணர்ந்தேன். கோயில் மணி அடிப்பது போல் ஒரு உணர்வு. 

டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... டிங், டிங்... 

"இந்த அலாரம் வைச்சு பெட் காபி குடிக்கிற பழக்கத்தை என்னைக்குதான் விடுவீங்களோ? என்னங்க..... மணி 6 ஆச்சு. பெட் காபி வச்சுருக்கேன்.... ஆற்றதுக்குள்ள எந்திருச்சு குடிங்க..." என்று என் மனைவியின் குரல் கேட்டு எழுந்தேன்.

Monday, January 24, 2022

சல சல மழையில்

ல சல மழையில்...

ங்கு போல் பனியில்....

சங்கீதம் பாட.....

சந்ததாளம் போட......

இசையென வந்திடுவாய் இனிய பூங்குயிலே......

Tuesday, January 18, 2022

தர்மம்

 காந்தி மார்க்கெட்டில் 

                    கழைக்கூத்தாடியின் துண்டு.....!

காந்தி ரோடு சிக்னலில்

                    கையில் குழந்தையுடன் தாய்.....!

கண்ணாடிக் கூண்டில் 

                       கையில் குழந்தையுடன் மாதா......!

ஆம்.... தர்மம் வாழ்கிறது......

Thursday, November 25, 2021

நீதிமன்றப் பூனை

 நீதிமன்றப் பூனை - 25.11.2021


மீதிக்கு தவிக்கிறது ஒரு வெள்ளைப்பூனை வெளியே.

நீதிக்கு தவிக்குது ஒரு கூட்டம் கருப்பு பூனை உள்ளே....

Tuesday, August 10, 2021

ஒரு சிறு உரையாடல் - திருவள்ளுவரைப் பற்றி....

 [11:46 AM, 7/29/2021] Hong Kong Somu Annan: "ஆதிபகவன் முதற்றே"   "ஆதிபகலவன்"   இதில் எது சரி ? இதுவரை உரை எழுதிய யாரும் ஏன் பகலவன் என்று பொருள் கொள்ளவில்லை ?

[11:55 AM, 7/29/2021] RM S Viswanathan: ஆதி பகவன் என்பதே சரி..... இதுவரை உரை எழுதியவர்கள் எல்லாம் பகவன் என்றே எழுதியுள்ளனர். 

அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து – குறள் 1 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு 

மு.வ விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. 

சாலமன் பாப்பையா விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது. 

கலைஞர் விளக்கம்: அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை

[12:14 PM, 7/29/2021] Hong Kong Somu Annan: பகலவன் என்று சூரியனையும், நீரின்றி அமையாது உலகு என்பதில் வருணனையும் பொருள்படக் கூறியிருந்தாரேயானால் வள்ளுவர் ஒரு இந்து தானே ?

[12:37 PM, 7/29/2021] RM S Viswanathan: இந்த கோட்பாடு சிரமண மதங்களிலும் உண்டு. இவர் இந்துவா, ஆசீவகரா, சமணரா அல்லது புத்தம் சார்ந்தவரா என்ற ஒரு பெரிய ஆராய்ச்சி இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. 

திருவள்ளுவரும், சமயமும்

திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.

திருவள்ளுவரும், சைவமும்

திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர். இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், ‘திருவள்ளுவர் சித்தாந்த சைவர்’ எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.

அயோத்திதாசரும் தன்னுடைய திருவள்ளுவ ஆராய்ச்சியில் திருவள்ளுவரை சமண மதத்தவராகவே காண்கிறார். மேலும், திருவள்ளுவர் தனியாக தந்து உள்ள ஊழ் என்னும் அதிகாரமும் ஒரு காரணம். 

அறத்துப்பாலில் வள்ளுவர் மூன்று இயல் வைத்து உள்ளார். அதில் இல்லறவியலுக்கு 20 அதிகாரமும், துறவறவியலுக்கு 13 அதிகாரங்களும், ஊழியலுக்கு ஒரே ஒரு அதிகாரமும் தந்து உள்ளார். 

ஆனால், அவர் எச்சமயமோ, அவரின் குறள் இப்பொழுதும், படிக்கும் தோறும் புது புது அர்த்தத்தை காலத்திற்கு தகுந்தார் போல் தந்து கொண்டு இருக்கிறது.

Thursday, August 5, 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

 Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of Aug 2021

திருக்குறளும் தலைமைத்துவமும் 2

ஒரு தலைவனுக்குத் தேவையான ஆளுமைத்திறனை வளர்க்க அற்புதமான விளக்காக இருப்பது நமது திருக்குறள். திருக்குறள் ஒன்றை ஒருவன் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்டு விட்டால் அது தரும் ஞானம் அளவிட முடியாதது. இதைப்போல் ஒரு உயர்வான ஒப்பற்ற இலக்கியம் வேறு எங்கும் கிடையாது. மணிமேகலையின் அட்சய பாத்திரம் போல அள்ள அள்ள குறையாதக் கருத்துச் சுரங்கம். இலங்கை ஜெயராஜ் என்ற பேச்சாளர், அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, "தமிழைப் படிக்க வேண்டுமா? திருக்குறளை படி. தெய்வத்தை படிக்க வேண்டுமா? திருவாசகம் படி" என்பதே. எவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லோருடைய வீடுகளிலும் இருக்க வேண்டிய இரண்டு முக்கியமான புத்தகங்கள், திருக்குறளும், திருவாசகமும். 

"அஞ்சாமை ஈகை அறிவூக்கம்  இந்நான்கும் 
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு".

ஒரு தலைவனுக்குத் தேவையான முக்கியமான பண்புகளில் அஞ்சாமை ஒரு முக்கியமான பண்பு. எடுத்த கொள்கையில் உறுதியாக இருப்பது. அல்லது நினைத்த காரியத்தில் நாம் அஞ்சாமல் துணிவுடன் இருப்பது முதல் பண்பாகும். ஈகை என்ற வார்த்தைக்கு தற்போதைய சூழ்நிலையில் ஞானம் தர்மம் என்ற இரண்டு பொருள்களையுமே எடுத்துக்கொள்ளலாம். தனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதும், தன்னிடம் உள்ள பொருளைத் தேவைப்படுவோருக்கு கொடுப்பதும் ஒரு தலைவனுக்கு அழகு. அறிவூக்கம் என்பதை அறிவு + ஊக்கம் என்று பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். தான் ஈடுபட்டுள்ள துறையில் மிகச் சிறந்த அறிவு பெற்றவனாக இருப்பதும் ஒரு செயலைத் தொடர்ந்து வெற்றி கரமாக செய்ய ஊக்கமுடயவனாக  இருப்பதும் ஒரு தலைவனின் மிகச் சிறந்த இயல்பு.

திருக்குறளும் தலைமை தத்துவமும்-1

Published in Lions Club of Chennai East Coast, Chennai Bulletin - "The Waves" - Month of July 2021

எல்லோருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்னவென்றால் சாதிக்க வேண்டும் !,  வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற என்ன செய்ய வேண்டும். கலாம் சொன்னதுபோல கனவு காணவேண்டும். ஒரு இலட்சியக் கனவு. இருந்தால், நம்மாலும் முன்னேற முடியும். மேலாண்மைத் துறையின் தந்தை  அல்லது குரு என்று அழைக்கப்படும் பீட்டர் ட்ரட் க்கக் ர் கருத்துப்படி "தலைவர்க ளின் முக்கியமான பணி, இலக்குகளை தீர்மானிப்பது மற்று ம் அதனை எவ்வாறு செயல்படுத்துத்துவது என்பதே".  

நம் தமிழ் இலக்கியத்தில், பதினெண்கீழ்க்கணக் க்குக நூலான திருக்குக் றளில், வள்ளுவர் 

"வெள்ளத்து அனைய மலர்நீர் நீட்டம் மாந்தர்தம் 

உள்ளத்தனையது உயர்வுர் " - என்று கூறுகிறார். 


ஒருவனுடைய கனவு இலட்சியம் நிறைவேறினால் அவன் வெற்றி பெற்றவனகிறான். இதையே தான் வள்ளுவர் தமது குறளில் எண்ணங்கள் என்ற கருத்தில் கூறுகிறார். நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்த அளவு உயர்ந்ததாக இருக்கும்  நாம் பெரும் வெற்றியும்.        நீரில் இருக்குக் ம் பூவின் தண்டு, நீர் நிலை எவ்வளவு ஆழம் இருக்குமோ அந்தந் அளவு நீளம் உள்ளதாக இருக்கும், நீரின் ஆழம் அதிகரிக்கக் அதிகரிக்கக் த் தண்டின் நீளமும் அதிகமாகிக் கொண்டு இருக்கும். அது போல மனிதர் உள்ளத்தில் உள்ள எண்ணங்கள் எவ்வளவு உயர்ந்ததாக இருக்குமோ அந்தந் அளவுக்கு தங்கள் வாழ்கையில் உயர்ந்த வெற்றியை பெறுவர் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.

சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5

  சமதர்மம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பெண் விடுதலை - 5 அண்ணல் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவிற்கு எழுதிய அரசியல் சாசனத்தில் தீண்டாமை மற்...